மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் கோவிட் தொற்றுக்கு இலக்காகி நால்வர் உயிரிழந்துள்ளதுடன், 64 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மூவரும் என 4 பேர் உயிரிழந்ததையடுத்து மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை கோவிட் 3ஆவது அலையில் 23 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்தே உயிரிழப்பு 32ஆக அதிகரித்ததுடன் 1807 கோவிட் தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து மாவட்டத்தில் கோவிட் தொற்றாளர்கள் 2790 பேராக அதிகரித்துள்ளதுடன், 1008 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தொடர்ந்தும் 957 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், கடந்த 7 நாட்களில் 786 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post A Comment:
0 comments so far,add yours