(த.தவக்குமார்)
கடந்த 9 நாட்களாக கடலுக்கு சென்ற மீனவர்கள் இதுவரை கரைக்கு திரும்பவில்லை.எனவே அம்மீனவர்களின் குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல நஷ்டஈடு அல்லது விசேட கொடுப்பனவை வழங்க கல்முனை மாநகர சபை ஏகமனதாக தீர்மானம் மேற்கொண்டுள்ளது.
கல்முனை மாநகர சபையின் மாத அமர்வு புதன்கிழமை(25) மாலை முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றக்கீப் தலைமையில் நடைபெற்ற போது இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மேற்குறித்த விடயத்தை சபையின் கவனத்திற்கு தேசிய காங்கிரஸ் கட்சியின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் துணை மருத்துவர் எம்.எம். சப்ராஸ் மன்சூர் கொண்டு வந்திருந்ததுடன் குறித்த கடலுக்கு சென்று காணாமல் போன மீனவர்களின் குடும்பத்திற்கு தற்காலிகமாவது வாழ்வாதாரத்தை கொண்டு செல்வதற்கு ஏதாவது கொடுப்பனவையோ அல்லது நஷ்டஈட்டையோ எமது மாநகர சபை பெற்றுக்கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டதற்கு இணங்க மாநகர சபை முதல்வர் குறித்த விடயத்தை மனிதாபிமான நடவடிக்கையாக சபை ஏற்றுக்கொண்டு குறித்த மீனவ குடும்பங்களிற்கு உதவி வழங்க சபை நடவடிக்கை மேற்கொள்ளும் என குறிப்பிட்டார்.
அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது மாளிகைக்ககாட்டுத் துறையில் இருந்து ஆழ்கடல் இயந்திரப் படகு ஒன்றில் மீன்பிடிக்கச் சென்ற 3 மீனவர்கள் இதுவரை கரைதிரும்பவில்லை என்பதுடன் கடந்த புதன்கிழமை(18) குறித்த படகில் சென்ற நிலையில் 9 நாட்களாக எவ்வித தொடர்புகளும் இன்றி தாங்கள் உள்ளதாக அவர்களின் குடும்பத்தினர் கவலை தெரிவித்த நிலையில் உள்ளனர்.இதில்
சாய்ந்தமருதை சேர்ந்த சீனி முகம்மது ஜுனைதின் (வயது 36) இஸ்மா லெப்பை ஹரீஸ் (வயது 37 ) காரைதீவை சேர்ந்த சண்முகம் சிரிகிருஷ்ணன் (வயது 47) ஆகிய மீனவர்களே குறித்த படகில் பயணம் செய்து காணாமல் போய் உள்ளனர்.
இவர்கள் பற்றிய தகவல்களை பொலிஸ் கடற்படை ஆகியோருக்கும் அறிவித்துள்ளதுடன் மீனவ சங்கங்களும் தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளது.
அதனை தொடர்ந்து கல்முனை மாநகர சபையினால் மேற்கொள்ளவேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பாக மாநகர சபையின் மாதாந்த அமர்வில் ஆராயப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours