(காரைதீவு  நிருபர் சகா)
காரைதீவில் மின்சாரத்தாக்கி பலியானதாகக்கூறப்படும் மாணவி நடேஸ்வரரராஜன் அக்ஷயாவின் பூதவுடல் பிரேத பரிசோதனைக்காக அம்பாறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

நேற்றுமுன்தினம்(7) சனிக்கிழமை காலை பலியான மாணவி அக்ஷயாவின் பூதவுடலை சம்மாந்துறைப்பொலிசாhரின் ஏற்பாட்டில் சம்மாந்துறை நீதிவான் வந்து பார்வையிட்டு பிரேதபரிசோதனைக்கு உத்தரவிட்டார்.

அதன்படி அன்று(7) பிற்பகல் அம்பாறை வைத்தியசாலைக்கு பூதவுடல் கொண்டுசெல்லப்பட்டதாயினும் சட்டவைத்தியஅதிகாரி இன்மையால் நேற்றும்(8)ஞாயிற்றுக்கிழமை அங்கேயே வைக்கப்பட்டிருந்தது.

பெரும்பாலும் இன்று(9) திங்கட்கிழமை காலை சட்டவைத்தியஅதிகாரி பிரேத பரிசோதனை செய்தபிற்பாடு உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

அநேகமாக இன்று மாலை காரைதீவு இந்துமயானத்தில் நல்லடக்கம் செய்யப்படலாமென மாணவியின் உறவினரொருவர் தெரிவித்தார்.

மாணவியின் இத்திடீர் மரணத்தால் முழுக்காரைதீவுக் கிராமமே சோகமயமாகவுள்ளது. நேற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்துசென்றனர்.வீதிகளிலெல்லாம் மரணஅறிவித்தல் அனுதாபஅஞ்சலி பதாதைகள் தொங்கவிடப்பட்டுள்ளன.

குறித்தமாணவி கல்முனை உவெஸ்லி உயர்தரக்கல்லூரியில் க.பொத.உயர்தரம் உயிரியல் பிரிவில் முதலாம்வருடத்தில் கற்றுவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours