(த.தவக்குமார்)
பொலன்னறுவை மின்னேரியா மரதன்கடவல பகுதியில் இரண்டு பஸ்வண்டிகள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியதில் பஸ்வண்டி சாரதியொருவர் சம்பவ இடத்தில் உயிர் இழந்துள்ளதுடன் 60 க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த விபத்து சம்பவமானது மின்னேரிய பொலிஸ் நிலையத்தை அண்மித்ததாக நேற்று புதன் கிழமை சுமார் இரவு 11.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

கல்முனையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த களுவாஞ்சிகுடி மோகன் ஸ்டோர் உரிமையாளர் திருவிளங்கம் என்ற தனியாருக்கு சொந்தமான பஸ்வண்டியும் கொழும்பில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு கல்முனையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபையின் கல்முனை சாலைக்கு சொந்தமான பஸ்வண்டியும் நேருக்கு நேர் மோதியதனாலேயே குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

இரண்டு பஸ்வண்டிகளும் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளதுடன் போக்குவரத்து சபைக்கு சொந்தமான சாரதியான 53 வயதுடைய ஓட்டமாவடி மீராவோடையைச் சேர்ந்த எச்.எல்.சலீம் என்பவரே சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளதுடன் இரண்டு பஸ்வண்டியில் பயணித்த 60 க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்த நிலையில் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் சிலர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காயமடைந்தவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை போக்குவரத்திற்கு சொந்தமான பஸ் மற்றொரு வாகனத்திற்கு வழி விடும்போது வேகமாக வந்த தனியார் பஸ் மோதியுள்ளது.

விபத்து காரணமாக ஹபரணை – மட்டக்களப்பு வீதியில் சுமார் 2 மணித்தியாலங்கள் போக்குவரத்து தடைப்பட்டிருந்ததாக தெரியவருகிறது.

மேற்படி விபத்து சம்பவம் தொடர்பில் மின்னேரியா பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.









Share To:

Post A Comment:

0 comments so far,add yours