வருகின்ற பொது தேர்தலுக்கு வேட்பாளர்களை நிறுத்துவது தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் பாரிய கலவரமே வெடித்து உள்ளது என்று சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர் தேசபந்து கலாநிதி கயான் தர்ஷன தெரிவித்தார்.

இவர் வருகின்ற பொது தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக கட்சியின் கொழும்பு தலைமையகத்தில் வைத்து வேட்பு மனுவில் நேற்று முன் தினம் திங்கட்கிழமை சுப நேரத்தில் கையொப்பம் இட்டார்.

இதை தொடர்ந்து நேற்று செவ்வாய்க்கிழமை ஊடகங்களுக்கு கருத்து கூறிய இவர் மேலும் தெரிவித்தவை வருமாறு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கமே நாட்டை ஆளுகின்றது என்று சொல்லப்படுகின்ற போதிலும் வேறு ஒரு விதமான பார்வையே மக்கள் மத்தியில் நின்று நிலவுகின்றது. கோத்தா, மஹிந்த, பசில், நாமல் என்று ஒவ்வொருவருமே தனி தனி துணை குழுக்களை வைத்து கொண்டு அதிகாரம் செய்கின்றார்கள். ஒருவரை ஒருவர் மேவ வேண்டும் என்கிற வகையில் பனி போர்கள் செய்கின்றனர். 

இவர்களுக்கு இடையிலான அதிகார போட்டிக்கு நாடும், மக்களும் பலிக்கடாக்கள் ஆகிய வண்ணம் உள்ளனர். இதனால்தான் நூறு நாட்கள் கடந்து விட்ட போதிலும் மொட்டு கட்சியின் ஆட்சியில் மக்கள் நலன் சார்ந்த விடயங்கள் எவையும் நடந்து விடவே இல்லை. இவர்கள் காரணமாக அரசாங்க இயந்திரம் முடங்கி கிடக்கின்றது என்று சொல்வதிலும் எந்த தவறும் கிடையாது.

அதே போலவே மொட்டு கட்சியின் வேட்பாளர்கள் தெரிவுக்குள்ளும் குடுமி சண்டை நடந்த வண்ணம் இருக்கின்றது என்று தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன. ஏட்டிக்கு போட்டியாக ஒருவரை ஒருவர் விழுங்குவதால் உத்தேச வேட்பாளர்களின் பெயர்கள் மாறி மாறி வெட்டி கொத்தப்படுகின்றன. ஆனால் ஒரு விடயத்தில் மாத்திரம் இவர்கள் ஒற்றுமையாக உள்ளனர். அது என்னவென்றால் தமிழ் பேசும் வேட்பாளர்களை உச்ச பட்ச அளவில் இயலுமான வரை தவிர்த்து கொள்ள வேண்டும் என்பதாகும்.

அம்பாறை மாவட்டத்துக்கான வேட்பாளர்கள் தெரிவில் பாரிய கயிறு இழுத்தல் போட்டி மொட்டுக்குள் இடம்பெறுகின்றது என்றும் நான் அறிகின்றேன். முன்னாள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸநாயக்க வேட்பு மனுவில் கையொப்பம் இட மறுத்து முரண்டு பிடிப்பதால் பெரிய களேபரமே அங்கு நடக்கின்றது. அவருக்கு பிடிக்காதவர்களுக்கு வேட்பாளர்களாக இடம் அளிக்கப்பட கூடாது என்பதில் முதலை பிடியாக இருக்கின்றார். இவ்விடயத்தில் இவர் ராஜபக்ஸக்களின் சொல்லையும் கேட்க தயாராக இல்லை என்பதால் பிரச்சினை எல்லை மீறி செல்கின்றது.

நான் அம்பாறை மாவட்டத்தின் மூவின மக்களினதும் கனவுகளை மனதில் சுமந்தவனாகவே இத்தேர்தலில் எமது தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராக களம் இறங்குகின்றேன். குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றையும் இதயத்தில் நிரப்பி கொண்டவனாகவே இத்தேர்தலில் போட்டியிடுகின்றேன். இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால் எனக்கு நீங்கள் ஒவ்வொருவரும் வழங்குகின்ற பேராதரவு அம்பாறை மாவட்டத்துக்கான புதிய உதயம் ஒன்றுக்கான இலட்சிய பயணத்தின் ஆரம்ப புள்ளியாக இருக்கும் என்பதையும் இத்தருணத்தில் சொல்லி வைக்கின்றேன். 
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours