கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பிரதேசங்களில் தற்போதைய நிலையில் 750 தனிமைப்படுத்தல் நபர்கள் உட்பட அவர்களின் குடும்பம் சார்ந்த 2000 இற்கும் அதிகமானவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கே.சுகுணன் தெரிவித்தார்.

அக்கரைப்பற்றில் இடம்பெற்ற அம்பாரை மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான விசேட சந்திப்பொன்றின் பின்னர் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு கூறினார்.

இதேநேரம் அம்பாரை மாவட்டத்தில் இதுவரையில் கொரோனா தொற்றுள்ள யாரும் கண்டுபிடிக்கப்படவில்லை எனும் ஆரோக்கியமான செய்தியை தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.

ஆயினும்; வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த 1000 பேர் வரை வீடுகளில் தனிமைப்படுத்தி 14 நாட்களின் பின்னர் அவர்களை விடுவித்ததாகவும் பாதுகாப்பற்ற மாவட்டங்களில் இருந்து இடம்பெயர்ந்து இங்கு வருகை தந்த உள்ளுர்வாசிகளை கூட தனிமைப்படுத்தியதாகவும் அச்செயற்பாடு தொடர்ந்து இடம்பெறுவதாகவும் கூறினார்.

இந்த நிலை தொடருமேயானால் வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார துறையினரின் பாதுகாப்பில் ஏற்படும் அசௌகரியங்களை தடுப்பது எப்படி என்கின்ற விடயத்தை நாங்கள் முன்கொண்டு செல்கின்றோம். எனினும் கல்முனை பிராந்தியத்தில் கொரோ தொற்றுநோய் கட்டுப்பாட்டினுள் இருக்கின்றது எனும் சந்தோச நிலை இருந்தாலும் எதிர்வரும் காலங்களிலும் இறுக்கமான நிலையினை பொதுமக்களும் அரச மற்றும் தனியார் துறையினரும் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

மேலும் வீட்டிலேயே இருந்து தனிமைப்படுத்தல் எனும் விடயத்தையும் பொதுச்சுகாதார பழக்க வழக்கங்களான கைகழுவுதல் முகத்தை கைகளால் தொடுதலை தவிர்த்தல் சமூக இடைவெளியை பேணுதல் போன்ற சுகாதார பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் நோய் தொற்றை தவிர்க்க முடியும் எனவும் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும்போது இந்த விடயங்களை மிகவும் நுணுக்கமாக கையாள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இதேநேரம் உலகளாவிய ரீதியில் பரவி வருகின்ற இந்த தொற்றுநோயை நாமும் எதிர்கொண்டுள்ளோம். இதனால் பல அரச திணைக்களங்களும் இறுகிய நிலையில் உள்ளதுடன் இதனை தடுப்பதற்கு இலங்கை திருநாடும் அதுபோல் கல்முனை பிராந்தியமும் பல முன்னேற்பாடுகளை செய்து வருகின்றது என்றார்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours