(க.விஜயரெத்தினம்)
கிழக்கு மக்களின் விடிவெள்ளி சி.சந்திரகாந்தன்(பிள்ளையான்) அண்ணன் நிரபராதியாக மிகவிரைவில் வெளியில் வருவார்.பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் நம்பிக்கை தெரிவிப்பு.
இம்மாதம் 20ஆம் திகதி நடைபெறவுள்ள புதிய நாடாளுமன்ற அமர்வில், தடுப்பு காவலில் சிறையிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) கலந்துகொள்வார் எனவும், அதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும், கட்சியின் செயலாளர் பூ. பிரசாந்தன் தெரிவித்தார்.
தமது தலைவர், நாடாளுமன்றம் சென்ற பிற்பாடே ஏனைய நடைமுறைகள் முன்னெடுக்கப்படுமெனவும் தமிழர்கள் ஆண்ட சபையை, மீண்டும் தமிழர்கள் ஆள்வதற்கான தலைமைத்துவத்தை ஏற்பதற்கு தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் விடுலைப் புலிகள் கட்சியின் மட்டக்களப்பு வாவிக்கரையில் அமைந்துள்ள தலைமைக் காரியாலயத்தில் நேற்று (16) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது, “நடந்து முடிந்த தேர்தல், கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தியும் தனித்துவமும் பாதுகாக்கப்படவேண்டும் என்ற பாரிய செய்தியை வெளிப்படுத்தியுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட மக்கள், அதிகமான வாக்குகளை வழங்கி, 04 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு வந்துள்ளனர்.
“எனவே, நாடாளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்டிருக்கின்ற அனைத்து உறுப்பினர்களும் ஒரே கூரையின் கீழ், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காக தமிழர்களின் இருப்பை பாதுகாப்பதற்காக ஒரே கூரையின் கீழ் பயணிக்க வேண்டுமென, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பகிரங்கமாக அழைப்பு விடுகின்றது.
“பயங்கரவாதத் தடைச்சட்டம் என்பது பிணையில் விடுதலை செய்யமுடியாது. ஆனால், முதலமைச்சராக இருந்தவருக்கு பயங்கரவாதத் தடைச்சட்டம் போடப்பட்டமை மிகவும் வேடிக்கைக்குரிய விடயம்.
“எது எப்படியாக இருந்தாலும் சட்டத்தின் அடிப்படையில் அவர் வெளிவருவதற்கான அனைத்து விடயங்களும் முடிவடைந்துள்ளன. அதற்காக மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்திருக்கின்றோம். மிகவிரைவில் சட்டத்துக்கு முன் அவர் நிரபராதியாக வெளியில் வருவார்” என்றார்.
Post A Comment:
0 comments so far,add yours