(காரைதீவு சகா)அம்பாறை மாவட்ட தமிழர்களின் சமகால அவசியமான அரசியல் பணியொன்றை புத்திஜீவிகளான நீங்கள் முன்னெடுத்திருப்பது கண்டு மகிழ்ச்சியடைகிறேன். உண்மையில் நீங்கள் பாக்கியவான்கள்.
இவ்வாறு கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளருமான சோமசுந்தரம் புஸ்பராசா புகழாரம்சூட்டினார்.
அன்புக்கரங்கள் அமைப்பின் ஏற்பாட்டில் உதயமான அம்பாறை மாவட்ட தமிழர் ஒருங்கிணைப்புக்குழு எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத்தேர்தலில் தமிழ்தரப்பினர் அனைவரும் ஒரே சின்னத்தில் ஒரே குடையின்கீழ் போட்டியிட்டு 3பிரதிநிதித்துவங்களையும் காப்பாற்றவேண்டும் என்ற நோக்கில் அரசியல் கட்சி முக்கியஸ்தர்களைச் சந்தித்துவருகிறது.
அந்தவகையில் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சோ.புஸ்பராசாவை சொறிக்கல்முனையிலுள்ள அவரது இல்லமுன்றலில் சந்தித்து ஒருமணிநேரம் கலந்துரையாடினர்.
1994 மற்றும் 2020 பொதுத்தேர்தல்களில் அம்பாறை மாவட்ட தமிழர் பிரநிதித்துவம் இழக்கப்பட்டதால் தமிழ்மக்கள் அநாதைகளாக்கப்பட்டனர்.
அதேபோன்று மாகாணசபையிலும் பிரிந்துநின்று பிரதிநிதித்துவத்தை குறைக்கமுடியாதென்பதற்காக அத்தகைய முயற்சியிலிறங்கியிருப்பதாக குழுவினர் தெரிவித்தனர்.
அதற்கு தாம் மகிழ்ச்சி தெரிவிப்பதாகவும் வரலாற்றில் முதற்தடவையாக புத்திஜீவிகள் குழுவொன்று தம்மைச்சந்தித்து இவ்வாறான நல்லவிடயத்தை முன்வைத்திருப்பதுகுறித்து பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.இம்முயற்சி வெற்றியளிக்கவேண்டும்.அதற்கு தன்னாலான பூரண ஆதரவைத்தெரிவிப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.


Post A Comment:
0 comments so far,add yours