துதி

சர்வதேச மகளிர் தினத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் எற்பாட்டில் அமைதி முறையிலான கவனயீர்ப்புப் போராட்டமொன்று இன்றைய தினம் மாமாங்கம் ஆலயம் முன்பாக சர்வதேச நீதி கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் உணவு தவிர்ப்புப் போராட்டம் இடம்பெறும் இடத்தில் முன்னெடுக்கப்பட்டது.


வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க மட்டக்களப்பு மாவட்ட தலைவி அ.அமலநாயகி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இக் கவனயீர்ப்பு நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவுகள் பலரும் கலந்து கொண்டனர்.

சர்வதேச மகளிர் தினத்தில் தங்கள் உறவுகளுக்கு என்ன நேர்ந்தது? தங்கள் உறவுகள் எங்கே? போன்ற பல்வேறு கேள்விகளுடன் போராடிக் கொண்டிருக்கும் பெண்களுக்கு சர்வதேசத்தினூடாக ஒரு நீதி வேண்டும் என்ற அடிப்படையில் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அத்துடன், தற்போதைய அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்த நிலையில், முற்று முழுதாக சர்வதேசத்தை நாடி நிற்கின்ற மக்களை சர்வதேசம் ஏமாற்றாமல் உரிய நீதியைப் பெற்றுத் தர வேண்டும், லண்டனில் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அம்பிகை அம்மணியின் கோரிக்கைகளுக்கு அந்நாட்டு அரசாங்கம் உரிய கவனமெடுத்துச் செயற்பட வேண்டும். போன்ற கோரிக்கைளையும் இதன்போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் முன்வைத்தது.

இதேவேளை போராட்ட இடத்திற்கு வருகை தந்த மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகளால் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது நீதிமன்றத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தெரியப்படுத்தி நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட கட்டளையினை பாரப்படுத்த முற்பட்ட வேளை பொலிஸாரால் பெயர் குறிப்பிடப்பட்ட நபர்கள் உரிய இடத்தில் இல்லாமையால் அவ்விடம் விட்டுச் சென்றமையும் குறிப்பிடத்தக்கது.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours