(றாசிக் நபாயிஸ், ரி.கே.றஹ்மத்துல்லாஹ்)

சர்வ மத குழுக்களின் திறன்களை மேம்படுத்துவதுடன், மதங்களுக்கிடையிலான முரண்பாடுகளை நீக்குதல் மற்றும் பன்மைத்துவத்தின் அடிப்படையில் ஏனைய மதங்களுக்கு மதிப்பளித்து, புதிய நட்பு, இனநல்லுறவினை வளப்படுத்தி சிறந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கான பல்வேறு வேலைத்திட்டங்களை தேசிய சமாதானப் பேரவை முன்னெடுத்து வருகின்றது.

இவ்வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக, 'வட மேற்கிலிருந்து கிழக்கை நோக்கி' எனும் கருப்பொருளில் சமயத் தலைவர்களினது சமாதான யாத்திரை அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றை வந்தடைந்தது.

தேசிய சமாதான பேரவையின் அனுசரணையில், அட்டாளைச்சேனை சர்வமத குழு மற்றும் றுஹூனு லங்கா அமைப்பு இணைந்து அம்பாறை மாவட்டத்திற்கான நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

தேசிய சமாதான பேரவையின் நிகழ்ச்சித்திட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.யூ.உவைஸ் மதானி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பேரவையின் ஆலோசகர் சுமாது வீரவர்ண, திட்ட உத்தியோகத்தர் எஸ். வத்சலா மற்றும் சர்வமதக் குழுவின் தலைவர் எஸ்.ஹாசிம், றுஹூனு லங்கா அமமைப்பின் பணிப்பாளர் எஸ்.ஜவ்பர் மற்றும் சமயத் தலைவர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதி நிதிகள் இதில் கலந்து கொண்டனர்.

வட மேற்லிருந்து வருகை தந்திருந்தவர்களுக்கு மலர்கள் வழங்கி வரவேற்றதுடன், பாரம்பரிய கலாசாரத்தை பிரதிபலிக்கும் பொல்லடி மற்றும் பாடல் இசைக்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்நிகழ்வில், சமயத்தலைவர்களுக்கிடையிலான கருத்துப்பரிமாறள்கள் இடம்பெற்றதுடன், இரு குழுவினர்களுக்கிடையிலான சமய, கலை, கலாசாரம், பாரம்பாரியம் தொடர்பிலான அறிமுகமும் இடம் பெற்றன.

மத சகவாழ்வுக்கான கூட்டு ஈடுபாடு மற்றும் ஏனையவர்களுடன் சகோதரத்துவத்தை பகிர்ந்து கொள்ளல் போன்றனவை மூலம் இலங்கையில், பன்மைத்துவ சமுதாயத்தை வலுவூட்டுவதுடன் தேசத்தின் அமைதிக்கும் என்றும் பாடுபடுவோமென இதன் போது வலிறுத்தப்பட்டு, இலங்கையின் மாதிரிப் படத்தில் அனைத்து இன மக்களினாலும் அமைதி, சமாதானத்தை கட்டியயெழுப்பும் வகையில் தீபம் ஏற்றி வைக்கப்பட்டது.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours