(வி.ரி.சகாதேவராஜா)


உலகின் முதல் தமிழ்ப்பேராசிரியர் "முத்தமிழ் வித்தகர்" சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 97ஆவது துறவறதினவிழா இன்று(26)திங்கட்கிழமை சித்ரா பௌர்ணமியன்று சுவாமிகள் பிறந்த காரைதீவில் கொண்டாடப்படவிருக்கிறது.

சுவாமி விபுலாநந்த அடிகளார் 1924ஆம் ஆண்டில் இதேபோன்றதொரு சித்ராபௌர்ணமி தினத்தில்தான் துறவறத்தை மேற்கொண்டார்.பகவான் ஸ்ரீ இராமகிருஸ்ணபரமஹம்சரின் நேரடிச்சீடரான சுவாமி சிவானந்தரிடமிருந்து துறவற ஞானோபதேசம் பெற்றுத் துறவியானார்.

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் காரைதீவு சுவாமி விபுலாநந்த ஞாபகார்த்த பணிமன்றம் இணைந்து நடாத்தும் துறவற தினவிழா, மட்டக்களப்பு இராமகிருஷ்ணமிசன் மேலாளர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷஜானந்த ஜீ மஹராஜ் முன்னிலையில் நடைபெறவிருக்கிறது.

இன்றைய சிறப்புதினத்தில் சுவாமி விபுலாநந்த கற்கைநிலையத்தின் ஏற்பாட்டில் பண்ணிசை மற்றும் பரதநாட்டிய வகுப்புகளின் அங்குரார்ப்பண நிகழ்வுகளும், அதே மணிமண்டபத்தில் நடைபெறவிருக்கின்றன. அதேவேளை அங்கு அறநெறி நீதிநூல்களின் கண்காட்சியும், மணிமண்டபத்தில் "வித்தியகூடம்" எனும் நூலகமும் திறந்துவைக்கப்படவிருக்கின்றன.

இன்றைய 97ஆவது துறவறதினத்தையொட்டி இந்துகலாசார திணைக்களம் தயாரித்த சுவாமிவிபுலாநந்தரின் திருவுருவப்படம் வெளியிட்டுவைக்கப்படவுள்ளது எனவும் மன்றச்செயலாளர் கு.ஜெயராஜி தெரிவித்தார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours