நூருல் ஹுதா உமர்


முழு ஊரையும் பள்ளிவாசல் தலைமைத்துவத்தின் கீழ் ஒன்று சேர்த்து ஒரு கட்டுக்கோப்பான ஊராக சாய்ந்தமருதின் தாகத்தை நாட்டின்  மூலைமுடுக்கெல்லாம் எடுத்துக்காட்டிய பெருமை சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலின் பிரதம நம்பிக்கையாளர் மர்ஹூம் வை.எம். ஹனிபா அவர்களையே சாரும் என்றால் அது மிகையாகாது. இவ்வாறான சிறந்த தலைமைத்துவத்தை அந்த பிரதேசத்திற்கு  வேறெவராலும் கொடுக்க முடியாது என்பதே உண்மை. இலங்கை மக்களின் மனதில் இவரின் சாதனை பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்கும் என்பதே காலம் கூற இருக்கும் செய்தி என அக்கரைப்பற்று பிரதேசசபை உப தவிசாளர் ஏ.எம். அஷ்ஹர் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று பிரதேச சபை மாதாந்த சபை அமர்வு சபையின் தவிசாளர் எம்.ஏ. றாஸிக் தலைமையில் சபா மண்டபத்தில் நடைபெற்ற போது அண்மையில் மறைந்த சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலின் பிரதம நம்பிக்கையாளர் மர்ஹூம் வை.எம். ஹனிபா அவர்களுக்காக மௌனமாக இடம்பெற்ற துஆ பிரார்த்தனையை தொடர்ந்து பிரதேச சபை உப தவிசாளர் ஏ.எம். அஷ்ஹர் நிகழ்த்திய அனுதாப உரையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு உரையாடிய தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், பிரதேசத்தின் பொதுவிடயங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட அன்னாரின் இழப்பு முழு சாய்ந்தமருத்துக்கும் பெரிய இழப்பாகும். மருதூரின் உமர் முக்தார் என வர்ணிக்கப்பட்ட அவர் தான் சார்ந்த ஊர் மக்களுக்காய் தள்ளாத வயதிலும் தளராமல் நேரிய முறையில் வழிகாட்டி அதில் வெற்றியும் கண்டார். அல்ஹாஜ் வை.எம்.ஹனிபா சேரின் நல்லெண்ணங்கள் சகலதும் வெற்றி பெறவும், அவருடைய மறுமை வாழ்வு பிரகாசிக்கவும் அல்லாஹ் அவரை உயர்ந்த சுவர்கத்தில் நிலைக்கச் செய்யவும் அந்த சபையில் உள்ள  எல்லோரது சார்பிலும் பிரார்த்திக்கின்றோம் என்றனர்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours