அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பெரியநீலாவணை தொடக்கம் சாய்ந்தமருது வரையான வீதிகளுக்கு பெயர் பலகைகளை இடுமாறு கல்முனை மாநகரசபை உறுப்பினர் பீ.எம். ஷிபானினால் கல்முனை மாநகர முதல்வருக்கு வேண்டுகோள் முன் வைக்கப்பட்டிருக்கின்றது. கிழக்கு மாகாணத்தில் முக வெற்றிலையாக காணப்படும் கல்முனை மாநகரம் இன்னும் முகவரி காட்டக்கூடிய காலாவதியான, அலங்கோலமாக பெயர்ப்பலகைகளை தாங்கி இருப்பது கண்டு மாநகர மக்கள் பெருங்கவலை அடைவதாகவும் அந்த கடித்ததில் மாநகரசபை உறுப்பினர் பீ.எம். ஷிபான் குறிப்பிட்டுள்ளார்.
கல்முனை மாநகரம் முன்னாளில் நகர சபையாக இருந்த போது தவிசாளர் ஐ.எல்.எ.ஹமீட் அவர்களினால் இடப்பட்ட பெயர் பலகைகளே இன்றுவரைக்கும் தொடர்வதாகவும் ,அவை துருப்பிடித்து பெயர் மழுங்கி வெறும் பதாகைகளாக மாத்திரமே காட்சிக்கு இருப்பதாகவும் அவர் ஆதங்கப்பட்டார். இதுதொடர்பாக கடந்த மார்ச் மாதம் 36 வது கூட்டத்தொடரில் பீ.எம். ஷிபான் அவர்களினால் தனிநபர் பிரேரணை ஒன்றுக்காக கடிதம் சமர்ப்பிக்கப்பட்டிருந்த போதும் கூட்டத்தொடரில் அது எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பதுடன் இது தொடர்பில் விரைவில் கவனம் செலுத்துவதாக முதல்வர் உறுதிமொழி வழங்கியதாக மாநகரசபை உறுப்பினர் பீ.எம். ஷிபான் தெரிவித்தார்.

Post A Comment:
0 comments so far,add yours