மட்டக்களப்பில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளை முறையிட்டு அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள விசேட தெலைபேசி இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கையாளும் சேகிள் இளம் பெண்கள் அமைப்பினால் வடிவமைக்கப்பட்ட செயலியூடாக இயங்கும் இவ்விசேட தொலைபேசி இலக்கம் மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான கே. கருணாகரன் தலைமையில் இன்று (12) மாவட்ட செயலகத்தில் வைத்து அறிமுகம் செய்யப்பட்டது.
கொரோனா வைரஸ் பரவல் அச்சத்தினால் மக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்த்து பெண்களுக் கொதிரான வண்முறை மற்றும் சிறுவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வினைப் பெற்றுக் கொடுக்கும் நோக்குடன் சேகிள் இளம் பெண்கள் அமைப்பு இத்திட்டத்தினை கிழக்கு மாகாணத்திற்குள் செயற்படும் வகையில் வடிவமைத்துள்ளது. 0705506600 எனும் அவசர தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்பினை ஏற்படுத்தி மட்டக்களப்பு. அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முறைப்பாடு செய்து சம்மந்தப்பட்ட அரச பிரிவுகளினூடாக தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இத்தொலைபேசி இலக்கம் வாரத்தில் திங்கள், செவ்வாய் மற்றும் புதன் ஆகிய தினங்களில் காலை 10.00 மணி தொடக்கம் 2.00 மணிவரை செயற்பாட்டில் இருக்கும் என்பதுடன் அம்பாறை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் அரங்கம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் சுயம் சமூக மாற்றத்திற்கான அமைப்பு என்பவற்றின் ஒருங்கிணைப்புடன் செயற்படுமென்பது குறிப்பிடத்தக்கது.
இதன்போது மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த், உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரன், சேகிள் இளம் பெண்கள் அமைப்பின் நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் அஜானி காசிநாதர், அமைப்பின் நிதி முகாமையாளர் சத்தியசீலன் கார்த்தியாயினி, பெண்கள் அபிவிருத்தி மாவட்ட இணைப்பாளர் அருணாளினி உள்ளிட்ட பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

Post A Comment:
0 comments so far,add yours