கொரனா அச்சுறுத்தல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள பயணத்தடையினையும் மீறி மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்ட விரோதமான முறையில் மதுபான விற்பனையில் ஈடுபட்டுவந்த ஆறு பேரை மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ஏறாவூர்ப்பற்று,ஏறாவூர்,மண்முனை வடக்கு ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளில் முன்னெடுக்கப்பட்டு விசேட நடவடிக்கையின்போது ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 180 மில்லிலீற்றர் அளவு கொண்ட 100 மதுபான போத்தல்களும் மூன்று போத்தல் கள்ளும் மீட்கப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட மதுவரி அத்தியட்சகர் எஸ்.ரஞ்சன் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் நீதிமன்றம் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண உதவி மதுவரி ஆணையார் ஏ.தர்மசீலன் ஆலோசனைக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்ட மதுவரி அத்தியட்சகர் எஸ்.ரஞ்சனின் வழிகாட்டலில் மட்டக்களப்பு மது வரித்திணைக்கள பொறுப்பதிகாரி நியூட்டன் அவுஸ்கோனின் தலைமையில் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

Post A Comment:
0 comments so far,add yours