நூருல் ஹுதா உமர் 

சாய்ந்தமருது முன்னாள் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம் அவர்களின் வேண்டுகோளின் பிரகாரம் சாய்ந்தமருது  பிரதேச செயலாளரினால் கடந்த மார்ச் 7ஆம் திகதி தயாரிக்கப்பட்ட 60 இலட்சம் பெறுமதியான  4 வேலைத் திட்டங்களில் 3 திட்டங்களுக்கு  கிராமிய மற்றும் பாடசாலைகள் விளையாட்டு உட்கட்டுமான மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினால் 50 இலட்சம் ரூபா  நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கான முறையான திட்ட அறிக்கையினை சமர்ப்பிப்பதற்கு தேவையான அறிவுறுத்தல் சாய்ந்தமருது பிரதேச செயலாளருக்கு  அம்பாறை மாவட்ட செயலாளரூடாக மேற்படி அமைச்சினால்  அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் மைதான  சுற்றுமதில் அமைப்பதற்கு 20 இலட்சம் ரூபாய்கள், மண் இட்டு மைதானத்தை சீர் செய்வதற்கு 20 இலட்சம் ரூபாய்கள் அத்துடன்  புல் வளர்ப்பு மற்றும் பன்படுத்தலுக்கு 10 இலட்சம் ரூபாய்கள் என  மொத்தமாக 50 இலட்சம் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அபிவிருத்தி வேலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் நேற்று கள விஜயம் செய்து நிலைகளை ஆராய்ந்து கொண்ட சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரியும், இலங்கை பொதுச்சேவை ஆணைக்குழு உறுப்பினருமான ஏ.எல்.எம். சலீம் சாய்ந்தமருது விளையாட்டுக்கழக சங்கங்களின் பிரதானிகள் மத்தியில் உரையாற்றும் போது நிதி  ஒதுக்கீடு செய்த இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ, இதற்கான அனுமதியினை பெற்றுத்தருவதில் பங்காற்றிய தேசிய காங்கிரஸ் தலைவரும் திகாமடுல்ல  பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லாஹ் அத்துடன் அமைச்சின் செயலாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு நன்றிகளை தெரிவித்தார்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours