(எம்.எஸ்.எம்.ஸாகிர்)


முன்னாள் போக்குவரத்து இராஜாங்க அமைச்சரும் கேகாலை மாவட்டத்தின் முதலாவது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினருமான யூ.எல்.எம்.பாறூக் (வயது 80) நேற்று (06) வெள்ளிக்கிழமை அவரது சொந்த ஊரான கன்னத்தோட்டையில் காலமானார்.

கேகாலை மாவட்டத்தில் முதலாவது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினராக 1988 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட இவர், பின்பு நடைபெற்ற மூன்று தேர்தல்களிலும் வெற்றிபெற்று கேகாலை மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவானார்.

ஆர். பிரேமதாஸ அரசில் போக்குவரத்து இராஜாங்க அமைச்சராகவும் இவர், நியமிக்கப்பட்டார்.

இலங்கை மத்திய போக்குவரத்துச் சபையின் தலைவர் பதவியையும் வகித்த இவர், தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற பின் யூ.எல்.எம்.பாறூக் மன்றத்தை அமைத்து, சமூகப் பணிகளிலே
ஈடுபட்டார். 
 
கேகாலை மாவட்ட கல்வி  அபிவிருத்தி சங்கத்தின் தலைவராகவும், அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப சம்மேளன முன்னணிகளின் உப தலைவராக பணிபுந்த இவர், சிங்கள, தமிழ், முஸ்லிம் ஒற்றுமைக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினருமாவார்.

கடந்த இரு வருடங்களுக்கு முன் ருவன் வெல்ல பிரதேசத்தில் இவருக்கு 'துன்கொரலே அபிமானய' என்ற கௌரவப்பட்டம் வழங்கி பௌத்த பிக்குகள் உட்பட சிங்கள மக்கள் அனைவரும் இணைந்து பெரும் உபகார விழாவொன்றினை நடாத்தியது குறிப்பிடத்தக்கது.

இவருடைய ஜனாஸா நேற்று (06) மாலை அவரது சொந்த ஊரான கன்னத்தோட்டையில் சுகாதார ஒழுங்கு முறைகளைப் பேணி நல்லடக்கம் செய்யப்பட்டது.

சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர் நிஹால் பாரூக் உட்பட 9 பிள்ளைகளின் தந்தையான இவர், முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸ 1956 ஆம் ஆண்டு ருவன் வெல்லைத் தொகுதியில் போட்டியிடும் போது 15 வயது இளைஞராக இருந்து, அவருடைய வழியைத் தொடர்ந்து அரசியலில் ஈடுபட்டு, வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours