மட்டக்களப்பு மாவட்டத்தின்  14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் சதோச விற்பனை நிலையங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள்  தொடர்பில் முன்மொழிவுகளை  அமைச்சர் பந்துல குணவர்தன அவர்களிடம் முன் வைத்துள்ளேன் என இராஜங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் சதோச விற்பனை நிலையங்களின் ஊடாக மக்களுக்கு தேவையான பொருட்களை பெற்றுக்கொடுப்பதற்கான நடைமுறைகள் தொடர்பில் கண்டறிவதற்கான களவிஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் இங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

எமது நாட்டு மக்களின் நலனை கருத்திற்கொண்டு  கொரோனா தாக்கத்திற்கு மத்தியில்  இக்கட்டான சூழ்நிலையிலும் அரசாங்கத்தின் தலையீட்டினால் அனைத்து சதோச  விற்பனை  நிலையங்களும் திறக்கப்பட்டு  அத்தியாவசிய பொருற்களை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் அரசாங்கத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைத்திருப்போர் தொடர்பில் சட்டநடவடிக்கைகள் தற்போது  முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் பதுக்கி வைத்திருக்கும் பொருட்கள் கைப்பற்றப்பட்டு அவற்றை மக்களுக்கு நியாயமான விலையில் அனைவருக்கும் பொருட்களை நியாயமான விலையில் பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகளை சதோச விற்பனை நிலையங்களின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருக்கின்றது.

தற்போது அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் இடையிலான தொடர்பை தடுப்பதற்காகவே  சில வியாபாரிகள்  அத்தியாவசிய பொருற்களை பதுக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  பொருற்களை பதுக்குவோர் தொடர்பில் அரசாங்கத்துக்கு  தொடர்ச்சியாக முறைபாடுகள் கிடைக்கப்படுவதுடன்  அவர்கள் தொடர்பில் சட்டநடவடிக்கைகள் முன்னெடுத்து அவர்களின் அனைத்து பொருட்களும் அரசாங்கத்தினால் பறிமுதல் செய்யப்பட்டு அவற்றை அனைத்து சதோச  விற்பனை  நிலையங்களின்  ஊடாகவும் மக்களுக்கு நியாயமான விலையில் பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படு வருகின்றன.


கடந்தகால அரசாங்கம் இருந்த சந்தர்ப்பத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மக்கள் நலனுக்காக அமைக்கப்பட்ட  இரண்டுக்கும் மேற்பட்ட சதோச விற்பனை    நிலையங்கள்  மூடப்பட்டன. அவை இன்றும் திறந்த நிலையில் இருந்திருந்தால் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு மிக இலகுவாக இருந்திருக்கும். எனினும் தற்போது எனது வேண்டுகோளின் கீழ்  மட்டக்களப்பு மாவட்டத்தின்  14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் சதோச விற்பனை நிலையங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் உற்பத்தியாளர்களின் பொருட்களை சதோச விற்பனை நிலையங்களுக்கு பெற்றுக்கொள்வது தொடர்பிலும்  பல முன்மொழிவுகளை  அமைச்சர் பந்துல குணவர்தன அவர்களிடம் நான் முன்வைத்துள்ளேன் எனதெரிவித்துள்ளார்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours