( வி.ரி.சகாதேவராஜா)

வரலாற்றுப்பிரசித்திபெற்ற மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய வளாகம் நிண்டகாலத்திற்குப்பிற்பாடு தற்போது புதுப்பொலிவுபெற்றுவருகிறது.

ஆலய பரிபாலனசபையின் புதிய தலைவராக பிரபலசமுகசேவையாளரும், காரைதீவுபிரதேசசபைத்தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவானதன்பிற்பாடு தினமும் ஒவ்வொரு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகிறது.

பலவருடகாலமாக  அங்கு காடுமண்டிக்கிடந்த ஆலய முற்புற வளாகச்சூழல், நேற்று ஜேசீபி கனரக இயந்திரம் மூலம் சுத்தம் செய்யப்பட்டது. தொண்டர்களின் சிரமதானமும் இடம்பெற்றது.

ஆலய நுழைவாயில் வரவேற்பு கோபுரம் பிரதானவீதியில் ஆலயத்தை சுட்டும்  ஆலயஅறிவித்தல்பதாதை என்பன நவீனமயப்படுத்தப்பட்டுவருகின்றன.

முன்னதாக, புதிய ஆலய அமைப்பு மற்றும் உள்வீதி வெளிவீதி என்பன பிரபல குருக்களான சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்களின் ஆகம விதிமுறைகளுக்கமைய அளவீடு செய்யப்பட்டு எல்லைகள் இடப்பட்டன.கூடவே ஆலய முன்முகப்பு, ஆலயத்தினுள் கர்ப்பக்கிரகம் ,பரிவாரமூர்த்திகள் உள்ளிட்ட பல விடயங்களில் ஆலோசனை பெறப்பட்டு அவற்றை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆலயதலைவர் கி.ஜெயசிறிலின் ஏற்பாட்டில் துரிதமாக ஆலய கும்பாபிசேகத்திற்கு முன்னதான பணிகள் பல கோணங்களிலும் ஜருராக இடம்பெற்றுவருகின்றன.ஆலயபரிபாலனசபை ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜாவும் உடனிருந்து புதிய திட்டங்களை வடிவமைத்து உதவிவருகிறார். உதவியாக செயலாளர் கே.சண்முகம் உள்ளிட்ட பரிபாலனசபை நிருவாகிகளின் ஒத்துழைப்பும் பெறப்பட்டுவருகிறது.

கொரோனாவுக்குப்பின்னர் தற்போது தினமும் ஆலயத்திற்கு பல ஊர்களிலுமிருந்து பக்தர்கள் வரத்தொடங்கியுள்ளனர். வெள்ளிக்கிழமைகளில் விசேடபூஜைகள் முறையாக நடைபெறத்தொடங்கியுள்ளன. பக்தர்கள் பாதுகாப்பாக பொங்கலிடுவதற்கும் ஆலய களஞ்சியசாலை மற்றும்  அலுவலகத்திற்குமாக புதியதொரு கட்டடம் விரைவாக நிருமாணிக்கப்படவுள்ளது.

எதிர்வரும் தீபாவளி தினம்(4) மற்றும் பூரணைதின பூஜைகள்  விசேட பூஜையாக இடம்பெறவிருக்கின்றன. அத்துடன்  அங்கு ஆன்மீகச்சொற்பொழிவு இடம்பெறவிருப்பதுடன் கும்பாபிசேகம் தொடர்பான முக்கிய அறிவித்தல்கள் தலைவரால் அறிவிக்கப்படவுள்ளது.

'அம்பாறை மாவட்ட தமிழ்மக்கள் வாழும் ஊர்களின் பொதுக்கோவிலான இங்கு சகலரும் வருகை தந்து சக்திமிக்க அம்பாளின் அருளைப்பெறவேண்டும். மேலும் ஆலயவளர்ச்சிக்கு சகல மக்களும்  பேராதரவைத்தருவதோடு எவ்வித வேறுபாடுமின்றி புதிய பரிபாலனசபையிலும் கும்பாபிசேகக்குழுவிலும் மகா கும்பாபிசேகத்திலும் பங்கெடுத்து பூரண ஒத்துழைப்பை வழங்கவேண்டும்' என கடந்தவெள்ளியன்று இடம்பெற்ற விசேடபூஜையின்பின்பு புதிய தலைவர் கி.ஜெயசிறில் கன்னி உரையாற்றுகையில் கேட்டுக்கொண்டுள்ளார்.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours