( நூருல் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ், றாஸிக் நபாயிஸ் )

கல்முனை மாநகர சபையினால் வழங்கப்படும் சம்பளத்தைக் கொண்டு "மாதம் ஒரு வேலைத்திட்டம்" எனும் நிகழ்ச்சி திட்டத்தை ஆரம்பித்து அதன் பிரகாரம் தனது இறுதி சம்பளத்தினை மருதம் விளையாட்டுக் கழகத்திற்கு தேவையான விளையாட்டு உபகரணங்களையும், சப்பாத்துக்களையும் வழங்கி வைத்திருக்கின்றேன் என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் பீ.எம்.ஷிபான் தெரிவித்தார்.

மருதமுனை மருதம் விளையாட்டுக்கழகத்திற்கு தேவையாக இருந்து வந்த விளையாட்டு உபகரணங்களையும், சப்பாத்துக்களையும் விளையாட்டுக்கழக நிர்வாகத்தினரின் வேண்டுகோளின் பேரில் இம்மாத சம்பளத்தில் பெற்றுத்தருவதாக வாக்குறுதி அளித்திருந்தமையை நிறைவேற்றி வைத்தமை மகிழ்ச்சியளிப்பதாக இங்கு கருத்து வெளியிட்ட மருதம் விளையாட்டுக்கழக நிர்வாகத்தினர் மகிழ்ச்சி வெளியிட்டனர்.

திங்கட்கிழமை இரவு தனது இல்லத்தில் வைத்து மருதம் விளையாட்டுக்கழக நிர்வாகத்தனரிடம் விளையாட்டு உபகரணங்களை கையளித்த அங்கு உரையாற்றிய கல்முனை மாநகர சபை உறுப்பினர் பீ.எம்.ஷிபான், எனக்கு வாக்களித்த எனது வட்டார மக்கள் எந்தத் தேவையும் இன்றி எனக்காக வாக்களித்தவர்கள். அவர்கள் எனக்கு வாக்களிப்பதற்காக  பணமோ பொருளோ என்னிடம் கேட்டதுமில்லை.நான் கொடுத்ததும் இல்லை. சேவை நோக்கம் கருதி வாக்களித்த மக்களின் தேவையை நிறைவேற்றும் பொருட்டு எமது பிரதேசத்தில்  பொதுப்படையான தேவைகளை இனங்கண்டு செயலாற்ற வேண்டிய கடமைப்பாடு எனக்கு உள்ளது. எதிர்வரும் காலங்களிலும் பல வேலைத்திட்டங்களை செய்ய காத்திருக்கிறேன் என்றார்.

இந்நிகழ்வில் மருதம் விளையாட்டுக்கழக நிர்வாக சபை உறுப்பினர்கள் , விளையாட்டு கழக வீரர்கள், மருதமுனை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours