நூருல் ஹுதா உமர்


மாநகர சபையின் பிரதான கடமைகளில் ஒன்று திண்மக்கழிவுகளை அகற்றும் பணியாகும். அப்பணி கடந்த ஒரு மாதகாலமாக முன்னரை விட சற்று குறைந்த வேகத்தில் அக்கரைப்பற்று மாநகர சபை பிரதேசங்களில் நடைபெறுவதனை மக்கள் அடையாளம் கண்டிருக்கலாம். இது நிதி நிலைமை மோசமாக இருப்பதனால் ஏற்பட்டதாகும். இதற்கு காரணம் டீசல் விலை இருமடங்கு அதிகரித்ததும் வாகன உதிரிப்பாகங்களின் விலை பன்மடங்கு அதிகரித்தமையும் என கூறிக்கொண்டே போகலாம் அதனால் நிறுத்தி மாநகர சபையின் பிரதான வருமானம் ஆதன வரியாகும்.  இதுவரையில் 46 மில்லியன் ஆதன வரி  மக்களால் செலுத்தப்படாமல்  நிலுவையாக காணப்படுகின்றது என அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினரும், கிழக்கின் கேடயத்தை பிரதான செயற்பாட்டளருமான, அக்கரைப்பற்று அனைத்துப்பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவர் எஸ்.எம். சபீஸ் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது, திண்மக்கழிவுகளை அகற்றாமல் விட்டால், வீதி விளக்குகள் இரவு நேரங்களில் ஒளிராது இருந்தால், வடிகான்கள் துப்பரவு செய்யப்படாது  விட்டால், நீர் தேங்கி நின்றால் ஏன் பூனை, நாய் போன்ற விலங்குகள் இறந்துகிடந்தால் கூட நாம் மாநகர சபையைத்தான் அழைக்கிறோம். விமர்சிக்கிறோம். ஆனால் நாளொன்றுக்கு சராசரியாக தத்தமது  ஆதன மதிப்பிற்கு ஏற்ப பெருவாரியான  வரி இறுப்பாளர்களுக்கு 5 ரூபாயும் குறிப்பிட்டளவினருக்கு 8 ரூபாயும்
சிறு தொகையினருக்கு 13 ரூபாயும் தான்  அறவிடப்படுகின்றது  ( இதில் 1 ரூபாய் கூடலாம் குறையலாம்). இது நமது வீட்டுக்கு யாசகம் கேட்டுவருபவர்களுக்கு நாம் கொடுக்கும் அளவினை விட மிகச்சிறிய தொகையாகும் என்பதனை நமது மக்கள்  புரிந்து கொள்வார்கள்  என நாங்கள் நம்புகின்றோம்.

அண்மையில் ஒருகடையில் தேநீர் அருந்திகொண்டிருந்த வேளையில் ஒருத்தர் உள்ளே நுழைந்து  சிகரட் ஒன்றை வாங்கிக்கொண்டு  மாநகர சபை வரி அறவிடும் விடயம் தொடர்பில் பேசிவிட்டு நிமிர்ந்தபோது  நான் நிற்பதைகண்டு சங்கடமடைந்தார். நான் அவரிடம்  உங்களுக்கு வருடத்துக்கு எவ்வளவு வரி அறவிடுகின்றார்கள்? எனக்கேட்டேன் அவர் கூறினார் வருடத்துக்கு1200/=  என்று,  அப்போ  நான் அவருக்கு விளக்கினேன், மாதத்துக்கு 100 ரூபாய் நாளொன்றுக்கு 3.3 ரூபாய் ஆனால் நீங்கள் பத்தும் இந்த ஹராமான சிகரட்டுக்கு 65 ரூபாய் இவ்வளவு சேவை செய்யும் ஒரு நிறுவனத்துக்கு ஒரு நாளைக்கு 3 ரூபாய் கொடுக்க முடியாதா? என்று கேட்டதும்  அந்த சகோதரன் சங்கடப்பட்டார்.

குப்பைகளை 3 தினங்களுக்குள் அகற்றா விட்டால் என்ன நடக்கும் என்பதனையும் நாம் அறிவோம் அதற்குரிய ஏற்பாடுகளும் நடைபெறுகின்றது. அதனால் ஆதன வரி  நிலுவை உடையவர்கள் உங்களால் முடியுமான தொகையினை மாநகர சபையில் செலுத்துங்கள். இல்லாவிட்டால் வீடுவீடாக வரும் அதிகாரிகளிடம் செலுத்தி பற்றுச்சீட்டினை பெற்றுகொள்ளுங்கள். சமூர்த்தி பயனாளிகள், விதவைத் தாய்மார்கள், வருமானத்தை முற்றாக இழந்தவர்கள் வருமானம் இன்மையை உறுதிப்படுத்தி ஆதன வரிவிலக்கு பெற தகுதியுடையவர்களாகும் என மேலும் தெரிவித்தார்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours