பைஷல் இஸ்மாயில் -  


 

எரிவாயு விநியோகத்துக்கு பொதுமக்கள் எம்மோடு ஒத்துழைக்க வேண்டும். அப்போதுதான் எங்களால் திறன்பட செயற்பட முடியுமென சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா தெரிவித்தார்.

 

எரிவாயு விநியோகத்தை கிராம சேவகர் ஊடாக மேற்கொள்ள எடுத்த நடைமுறையில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட அதிருப்தி குறித்து பிரதேச செயலாளர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

இன்று நாடு முழுவதும் ஒரே விதமான பிரச்சனைதான் ஓங்கியுள்ளது. இவ்விடயம் சம்மாந்துறையில் மாத்திரம் இடம்பெறவில்லை. எரிவாயு நெருக்கடி தீர்வு குறித்து இதுவரை அரசினால் எமக்கு எதுவும் கூறப்படவில்லை. இந்த எரிவாயு நெருக்கடி நிலைமையில் பிரதேச செயலகம் தலையிடாமல் விநியோகஸ்தர் மூலம் கொடுக்க முயன்றபோது பல பிணக்குகள் பொதுமக்களிடையே உருவாகியது. அதனாலேதான் கிராம சேவகரூடாக விநியோகிக்க முடிவு செய்தோம்.

 

சுமார் 22இ000 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழுகிற சம்மாந்துறை பிரதேசத்திற்கு குறைந்தளவு எரிவாயு விநியோகம் போதாதுள்ளது. இருப்பினும் நாட்டின் நிலைமையை கருத்திற் கொண்டு இத்திட்டத்தினை ஏற்படுத்தியுள்ளோம். எது எவ்வாறாயினும் மின்பட்டியலை கொடுக்கின்றமையால் குடும்பத்துக்கு ஒரு சிலிண்டரே வழங்கப்படுகின்றது.

 

இந்த விடயத்தில் பொதுமக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்பட்டால் அல்லது கிராம சேவகர்களினால் முறைகேடு இடம்பெற்றால் உடனடியாக எமக்கு அறியத்தரம். அவர்களுக்கு எவ்வித பாகுபாடுமின்றி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கின்ற அதேவேளை இத்திட்டத்திற்கு பொதுமக்கள் தங்களின் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours