(வி.ரி. சகாதேவராஜா) 

அண்மையில் வெளியான க.பொ.த.
சாதாரண தரப் பரீட்சையில் வலயத்தில் முதல் நிலைக்கு வந்த பாடசாலை அதிபர் ஒருவரை, வீடு தேடிச் சென்று வாழ்த்திப்பாராட்டியது கல்விச் சமூகம்.

இச் சம்பவம் நேற்று முன்தினம் (28) திங்கட்கிழமை சம்மாந்துறையில் இடம் பெற்றது.

 சம்மாந்துறை கல்வி வலயத்தில் உள்ள 25 சா.தர வகுப்புகளுள்ள பாடசாலைகளில் முதல்  நிலையில்  சம்மாந்துறை ஸ்ரீ கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயம் தெரிவாகி இருந்தது.

அப் பாடசாலையில் இம்முறை பரீட்சைக்கு தோற்றிய பத்து மாணவர்களும் சித்தி பெற்று உயர் தரத்திற்கு தெரிவாகி இருக்கின்றனர். அவர்களில் தேவேந்திரன் சனுஷ்கர் என்ற மாணவன் எட்டு பாடங்களிலும் அதிசிறப்பு சித்தியும் ஒரு பாடத்தில் சிறப்பு சித்தியும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இதனையறிந்த கோரக்கர் கல்விச் சமூகம் சூட்டோடு சூடாக அதிபர் சோமசுந்தரம் இளங்கோவனின் வீரமுனை வீட்டிற்குச் சென்று ஆளுயர மாலைகள் சூட்டினர். வாழ்த்துக்கள் தெரிவித்துப் பாராட்டினர்.
பின்னர் அவரை வாகனப்பேரணி மூலம் கோரக்கர் கிராமத்துக்கு அழைத்து வந்தனர்.

அங்கு கிராம நுழைவாயிலில் வைத்து பாண்ட் வாத்தியம் சகிதம் அழைத்து வந்தனர். நேராக ஆலயத்தை தரிசித்த பின்னர் பாடசாலைக்கு அழைத்து வந்தனர்.

அங்கு அதிபர் ஆசிரியர்கள் மற்றும் சித்தி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் மாலை சூட்டி பாராட்டி கௌரவித்தனர்.
 
 கோரக்கர் நண்பர்கள் ஒன்றியம் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் ஒன்று இணைந்து செய்த இக் கௌரவத்தை ஒரு முன்மாதிரியான செயல்பாடு என்று பலரும் வியந்து புகழாரம் சூட்டினர்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours