( வி.ரி.சகாதேவராஜா)
சூழலியல் நீதிக்கான மக்கள் கூடல் அமைப்பின் முன்னெடுப்பின் ஊடாக சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு "எங்களுக்கும் குரல் இருக்கின்றது" எனும் தொனிப்பொருளில் அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேசத்தில் பொதுமக்களின் ஊர்வலமும் ஆர்ப்பாட்டமும் இன்று (16) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
சூழலியல் நீதிக்கான மக்கள் கூடலின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் துரையப்பா காத்தவராயன்( காந்தன்) தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
இந்த ஊர்வலமானது சம்மாந்துறை ஹிஜ்ரா சந்தியில் ஆரம்பித்து பிரதேச செயலகம் வரை நீண்டு சென்றது.
கலந்து கொண்டவர்கள் பலவித சுலோகங்களடங்கிய பதாதைகளை எஏந்திச் சென்றனர்.
எமது நாட்டில் மனித உரிமைகள் மதிக்கப்படவும் பாதுகாக்கப்படவும் வேண்டும் ,மனித உரிமைகளை பாதுகாப்பதன் ஊடாக இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தையும் பிரதான நோக்கமாக கொண்டு செயல்பட வேண்டும். அனைத்து மக்களும் சமமாக கருதப்பட வேண்டும். மக்களின் குடியிருப்பு விவசாய மற்றும் கலாச்சார வழிபாட்டுத் தலங்களுக்கான நிலங்கள் நியாயமான முறையில் விடுவிக்கப்பட வேண்டும் .எதிர்கால சந்ததிகளின் உரிமையாக கருதப்படும் இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் .என்பன போன்ற பல சுலோகங்கள் அடங்கிய பதாதைகள் கொண்டுவரப்பட்டன.
இதில் கிழக்கு வாழ் பொதுமக்கள் கிராம அடிப்படை அமைப்புகள் பெண்கள் அமைப்புகள் மாணவர் அமைப்பு சிவில் அமைப்புக்கள் சர்வமத அமைப்புக்கள் போன்றன இதில் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் முடிவில் நீண்ட மகஜரை சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் ஒப்படைத்தார்கள்.









Post A Comment:
0 comments so far,add yours