( வி.ரி. சகாதேவராஜா)

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் நலிவுற்ற கர்ப்பிணி பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் சத்துமா விநியோகம் இடம் பெற்று வருகின்றது.

மட்டக்களப்பு பின்தங்கிய அபிவிருத்தி சங்கம் (BUDS-UK) மற்றும் மட்டக்களப்பு மருத்துவமனைகளின் நண்பர்கள் (FOBH-UK) ஆகியவற்றின் கூட்டு முயற்சியினால் சத்துமா விநியோகம் மட்டக்களப்பு மற்றும் அம்பாரை மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
 மட்டக்களப்பு மற்றும் அம்பாரை மாவட்டங்களில் கிராமங்களில் உள்ள ஊட்டச்சத்து குறைபாடுள்ள கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சத்துமாவை விநியோகிக்கும் திட்டத்தை ஆரம்பித்து வைத்து அதன் விநியோகம் வெற்றிகரமாக  இடம்பெற்று வரும் நிலையில் கல்முனை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில் சத்துமா வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியகலாநிதி ந. ரமேஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஆர்.முரளீஸ்வரன்,
மட்டக்களப்பு பின்தங்கிய அபிவிருத்தி சங்கம் (பிரித்தானியா) உறுப்பினர் ரீ.சுந்தரராஜா, மட்டக்களப்பு மருத்துவமனைகளின் நண்பர்கள் அமைப்பின் இலங்கைக்கான தலைவர் வைத்திய கலாநிதி திருமதி.காந்தா நிரஞ்சன், குடும்ப நல வைத்திய நிபுணர் வைத்தியகலாநிதி என்.நிரஞ்சன், கல்முனை வைத்தியசாலை அபிவிருத்தி குழுவின் உறுப்பினர் வே.தங்கவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்ததுடன், பயனாளிகளுக்கான 
சத்துமா பொதிகளையும் வழங்கி வைத்தனர்.


ஒவ்வொரு குடும்பத்திற்கு 1000 கிராம் சத்துமா பேக் வழங்கி வைக்கப்பட்டதுடன், இரண்டு நிறுவனங்களும் இந்தத் திட்டத்தை மிகவும் வெற்றிகரமாகத் தொடர்ந்து முன்னெடுத்துவருகின்றது.

கல்முனை பிரதேசத்தில் இரண்டு கட்டங்களாக 3000 பொதிகள் விநியோகித்து இரண்டாம் கட்ட விநியோகத்தை நிறைவு செய்துள்ளனர்.

இந்த விநியோகம் கல்முனை, வடக்கிலுள்ள ஆதார வைத்தியசாலையினால் மேற்கொள்ளப்பட்டதுடன்,
காரைதீவு வைத்தியசாலை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி, நாவிதன்வெளி கல்முனை ஆதார வைத்தியசாலைகளுடன் இணைந்து சத்துமா விநியோகிப்பதற்கான உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours