நூருள் ஹுதா உமர்

சுவிற்சர்லாந்து இந்து சைவத் திருக்கோவில்  ஒன்றியத்தின் இந்த வருடத்திற்கான இரண்டாவது உறுப்பினர் கூட்டம் 12.03.2023 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சூரிச் அருள்மிகு சிவன் கோவில் வழிபாட்டின் பின்னதாக கலந்துரையாடல் மண்டபத்தில், பத்து திருக்கோவில்களின் உறுப்பினர்களுடன் சிறப்புற நடந்தது. 

இறைவணக்கம், அக வணக்கம் , ஆகியவற்றைத் தொடர்ந்து இராதாகிருஷ்ணன் அவர்களது  தலைமையுரையுடன் ஆரம்பமாகிய கூட்டத்தில், சம்பிரதாயபூர்வமான அறிமுகம் மற்றும் அறிக்கை வாசிப்புக்களைத் தொடர்ந்து, திருக்கோவில்களின் நடைமுறைகள் மற்றும் செயற்திட்டங்கள் என்பவை தொடர்பில் உறுப்பினர்களின் பல்வேறு கருத்துப் பரிமாற்றங்களும் இடம்பெற்றன. 

இக் கருத்துக்களின் வழி, இங்குள்ள திருக்கோவில்களில் உளவளம் தொடர்பான உரையாடல்களை நிகழ்த்துவதற்கான செயற்திட்டத்தை முன்னெடுப்பதற்கான முன்மொழிவும், தாயகத்தின் எல்லைக் கிராமங்களில், இடம்பெற்றுவரும் தீவிர மதமாற்றச் செயற்பாடுகளை எதிர்கொள்ளும் வகையில், இங்குள்ள ஆலயங்களின் அனுசரணையுடன், ஆலயப்புணரமைப்பு, மற்றும் அறநெறிப்பாடசாலை, என்பவற்றுக்கான பொது வேலைத்திட்டத்தை முன்னெடுத்தல் என்பனவும் ஆலோசனைகளாக முன்வைக்கப்பட்டுள்ளன. 

அன்பே சிவம் அறக்கட்ளையின் செயற்பாடுகளினூடாக ஆலயங்களுக்குத் தேவையான பொருட்களைப் பெற்றுக் கொள்ளுதல் தொடர்பான அறிமுக உரையாடலைத் தொடர்ந்து,  கலந்து கொண்ட உறுப்பினர்கள் அனைவருக்கும், சூரிச் சைவத்தமிழ் சங்கத்தினர் இனிய விருந்துபசாரத்தினையும்,  அன்பேசிவம் அமைப்பினரின் தமது உற்பத்திப் பொருட்கள் அடங்கிய பரிசுப் பொதிகளையும் வழங்கி நிறைவுறச் சிறப்பித்தார்கள்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours