( வி.ரி.  சகாதேவராஜா)

 வரலாற்றுப் பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை உற்சவ திருக்கொடியேற்ற நிகழ்வு இன்று(30) ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சண்முகமகேஸ்வரக்குருக்கள் முன்னிலையில், சிவஸ்ரீ திருக்குமரக் குருக்கள்  தலைமையில்
ஆலயகுரு சிவஸ்ரீ அங்குசநாதக்குருக்கள் ஒத்துழைப்பில் கொடியேற்ற உற்சவம் 12.23 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது.

ஆலய பரிபாலன சபை தலைவர் சுந்தரலிங்கம் சுரேஷ்  தலைமையிலான பரிபாலன சபையினர், மற்றும் ஆயிரக்கணக்கான கந்தன் அடியார்கள்  கலந்து கொண்டனர்.

விசேட பிரமுகர்களாக, கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி எம். கோபாலரெத்தினம் , பேராசிரியர் எஸ்.குணபாலன் , சுந்தரலிங்கம் முகுந்தன் (லண்டன்), இந்து ஊடகர் வி.ரி.சகாதேவராஜா உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தார்கள்.


இந்த உற்சவம் 18 நாட்கள் நடைபெற்று  ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி புதன்கிழமை சமுத்திர தீர்த்த உற்சவத்துடன் நிறைவடைய இருக்கின்றது. 

 இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்களால் சிறிய கோயிலாக அமைக்கப்பட்டு பின்பு இராஜராஜ சோழர் காலத்தில் கற்கோயில் அமைக்க பெற்று நான்கு கால பூஜைகள் செய்யப்பட்டு ஆடி அமாவாசை உற்சவமும் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமும் பகலில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படவிருக்கிறது.

பிதிர்க்கடன் செலுத்துகின்ற ஆடி அமாவாசை உற்சவம் என்பதால் இம்முறை பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள் என்பதற்காக  முன்னேற்பாடுகள்  செய்யப்பட்டிருப்பதாக ஆலய தலைவர் சுந்தரலிங்கம் சுரேஷ்   தெரிவித்தார்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours