நூருல் ஹுதா உமர்

அனைத்திலங்கை டெங்கு தடுப்பு உதவியாளர் சங்கத்தின் கல்முனை பிராந்திய டெங்கு தடுப்பு உதவியாளர்கள் கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றிவரும் தங்களை நிரந்தரமாக்க கோரி போராட்டம் ஒன்றை காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு முன்னால் இன்று (11) காலை முதல் முன்னெடுத்து வருகின்றனர்.

காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு முன்னால் தற்காலிய நிழல்குடை அமைத்து  சுலோகங்களை ஏந்தி சத்தியாகிரக முறையில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில் கருத்து தெரிவித்த அனைத்திலங்கை டெங்கு தடுப்பு உதவியாளர் சங்கத்தின் கல்முனை பிராந்திய தலைவர் கடந்த பல வருடங்களாக டெங்கு தடுப்பு உதவியாளர்களாக கடமையாற்றும் எங்களை அரசினால் நிரந்தரமாக நியமிக்க முடியாமல் இருக்கிறது. எங்களுக்கு நிரந்தர நியமனம் சுகாதார அமைச்சின் சுகாதார திணைக்களத்தின் கீழ் வழங்கப்பட வேண்டும். தினம் 730 ரூபாய் அளவில் கிடைக்கும் சம்பளம் இப்போதைய நாட்டின் நிலைக்கு போதாமல் இருக்கிறது.
 
ஜனாதிபதி, பிரதமர், சுகாதார அமைச்சர், சுகாதார அமைச்சின் பல்வேறு முக்கிய அதிகாரிகளுக்கு எங்களின் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டும் இதுவரை எங்களுக்கான தீர்வு கிட்டவில்லை. விரைவில் அரசாங்கம் எங்களுக்கான நிரந்தர தீர்வை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டெங்கு தடுப்பு உதவியாளர்கள் தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றனர்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours