நூருல் ஹுதா உமர் 

"நிலைபேறான சுற்றாலாத் துறைக்கு மொழி மற்றும் கலாசாரம்" எனும் தலைப்பில் 2023.12.14 ஆம் திகதி இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசாரபீட மொழித்துறையின் ஏற்பாட்டில் கலை கலாசார பீட கேட்போர் அரங்கில், மொழித்துறைத் தலைவர் கலாநிதி ஏ. விக்கிரமரட்ன தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்களும் அதிதிகளாக கலை கலாசாரபீட பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் மற்றும் கேரளா, கொச்சின் விஞ்ஞான தொழிநுட்பப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பி. அருணாச்சலம் அவர்களும் கலந்து கொண்டனர்.

மொழித்துறைத் தலைவர் கலாநிதி. ஏ. விக்கிரமரட்ன அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில் மொழித்துறை சார்பாக சிரேஷ்ட விரிவுரையாளர்களான பேராசிரியர் ஏ.எப்.எம். அஷ்ரஃப், கலாநிதி. க. இரகுபரன், ந. சுபராஜ் ஆகியோர் ஆய்வு ரீதியான கருத்துக்களை முன்வைத்து உரை நிகழ்த்தினர். தொடர்ந்து, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வருகை தந்த பேராசிரியர்கள், கலாநிதிகள், விரிவுரையாளர்கள், பணிப்பாளர்கள் ஆகியோர் சிறப்புரைகள் நிகழ்த்தினர்.

கருத்தரங்கில், இலங்கைச் சூழலில் மொழி மற்றும் கலாசாரத்தினூடாக சுற்றுலாத்துறையை வளர்ப்பதில் உள்ள சாதகங்கள், சவால்கள், சாத்தியப்பாடுகள் என்பன காத்திரமான உரைகளாக முன்வைக்கப்பட்டன. சுற்றுலாத் துறையில் மேம்பாடடைந்திருக்கும் இந்திய, அறபுலக மற்றும் சர்வதேச நாடுகள் தங்களது நிலையான சுற்றுலாத்துறைக்கு மொழி மற்றும் கலாசாரத்தை முன்வைத்து மேற்கொள்ளும் முயற்சிகள் பற்றி விரிவாக பேசப்பட்டன.

 இலங்கை கிழக்கு மாகாணத்தில் இத்துறையை மேம்பாடடையச் செய்வதில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வகிபாகம் பற்றியும் பிரஸ்தாபிக்கப்பட்டது. பார்வையாளர்களாக அமர்ந்திருந்த கல்வியலாளர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்களும் கேட்டறியப்பட்டது நிகழ்வின் முழுமையை எடுத்துக் காட்டியது.

கருத்தரங்க நிகழ்வினை மொழித்துறை விரிவுரையாளர் எம். அப்துல் றஸாக் நெறிப்படுத்தியதோடு இந்நிகழ்வுக்கான இணைப்பாளர்களாக மொழித்துறை சிரேஷ்ட பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ், வர்த்தக  முகாமைத்துவ பீட துறைத்தலைவர் பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா ஆகியோர் செயற்பட்டனர். 
காலத்திற்கு அவசியமானதும் நிறைவானதுமான இக்கருத்தரங்கம் தென்கிழக்குப் பல்கலைக்கழக, கலை கலாசாரபீட மொழித்துறையின் மற்றுமோர் வரலாற்றுத் தடயமாகும்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours