(ஏயெஸ் மெளலானா)

மட்டக்களப்பில் அமைந்துள்ள ICST எனும் விஞ்ஞான, தொழில் நுட்பத்திற்கான சர்வதேச பல்கலைக் கழகத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நேற்று சனிக்கிழமை (20) விஜயம் செய்தார்.

பல்கலைக்கழக நிறுவுனரும் முன்னாள் ஆளுநருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ்வின் அழைப்பின் பேரில் அங்கு சென்ற ரவூப் ஹக்கீம் கற்கை பிரிவுகளை பார்வையிட்டதுடன் கல்வி கற்கும் மாணவர்களுடனும் கலந்துரையாடினார்.

சவூதி அரேபியாவின் பாரிய நிதிப் பங்களிப்புடன் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ்வினால் நிறுவப்பட்ட இப்பல்கலைக்கழகம், கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் 2019 ஏப்ரல் 21 அன்று இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டு, இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.

கொரோனா வைரஸ் தொற்றுக் காலத்தில் கொரோனா நோயாளர் பராமரிப்பு நிலையமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது.

சில மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில் அங்கிருந்து இராணுவம் வெளியேறியதுடன் நிறுவுனர் ஹிஸ்புழ்ழாஹ்விடம் குறித்த பல்கலைக்கழகம் கையளிக்கப்பட்டது.

இந்நிலையில் பலத்த சேதமடைந்திருந்த பல்கலைக்கழக கட்டடத் தொகுதிகள், தளபாடங்கள், உபகரணங்கள் யாவும் புனரமைப்பு செய்யப்பட்டு, கடந்த வியாழனன்று (18) பல்கலைக்கழக வளாகம்
உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டு, அங்கு கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours