(வி.ரி.சகாதேவராஜா)
திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி அடைந்துள்ளதாக, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட தேர்தல் அத்தாட்சி அதிகாரியுமான சிந்தக அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.
அம்பாறை ஹாடி உயர் தொழில் நுட்பக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட தேர்தல் மத்திய நிலையத்தில் இருந்து பொலிஸ் பாதுகாப்புடன் வாக்குச் சீட்டுகள், வாக்குப் பெட்டி மற்றும் ஆவணங்கள் நேற்று காலை (05) அனுப்பி வைக்கப்ட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 458 வாக்களிப்பு நிலையங்களிலும் விசேட தேவையுடையவர்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் 19 உள்ளுராட்சி மன்றங்களுக்காக பதிவு செய்யப்பட்ட 04 இலட்சத்தி 78 ஆயிரம் வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
வட்டாரரீதியாக அமைக்கப்பட்டுள்ள 202 வாக்குகள் எண்ணப்படும் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந் நிலையங்களில் விசேட பாதுகாப்பு நடவடிக்ககைகள் ஏற்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தேர்தல் கடமைகளுக்காக 1300 உத்தியோகத்தர்களும், 2 ஆயிரம் பொலிஸாரும் இத்தேர்தல் கடமையில் ஈடுபடவுள்ளனர்.
வாக்காளர்கள் அனைவரும் நேர காலத்தோடு வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களிக்குமாறு கேட்டுள்ளார்.
Post A Comment:
0 comments so far,add yours