(வி.ரி. சகாதேவராஜா)

இந்துக்களின் பாரம்பரிய கதிர்காமத்திற்கான பாதயாத்திரை வழமைபோல இம்முறையும் யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து ஜெயாவேல்சாமி தலைமையில் அரோஹரா கோசத்துடன் உணர்வு பூர்வமாக இன்று 01ஆம் திகதி  வியாழக்கிழமை விசேட பூஜையுடன் ஆரம்பமானது.

26 வது வருடமாக இவ் வருடம் இன்று காலை 9.40 மணியளவில் செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து விசேட பூஜையுடன் அரோஹரா கோஷம் விண்ணைப் பிளக்க ஆரம்பமானது.
 யாத்திரீகர்களின் உறவினர்களும் வந்து ஆரத் தழுவி கண்ணீர் மல்க வழியனுப்பி வைத்தனர்.
பாதயாத்திரை தொடர்பான பதாகைகள் யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி முருகன் ஆலய வளாகத்தில் கட்டப்பட்டிருந்தன.

காலநிலை மாறுபாடுகளுக்கு மத்தியில் வழமைக்கு மாறாக இம்முறை முதல் நாளில் நூற்று இருபதுக்கு அதிகமாக அடியார்கள் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு கிழக்கு ஊவா ஆகிய 3 மாகாணங்களையும் யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை மொனராகல 7மாவட்டங்களையும் இணைத்து 55நாட்களில் 98ஆலயங்களைத்தரிசித்து 815கிலோமீற்றர் தூரத்தை நடந்துகடக்கும் இப் புனித பாதயாத்திரை இலங்கையின் மிகமிகநீண்ட தூர கதிர்காமபாதயாத்திரையாககருதப்படுகின்றது.

ஆனால் இம்முறை கதிர்காமம் ஆடிவேல்விழா உற்சவ காலம் ஒருமாத காலம் முன்கூட்டியே அறிவித்ததால் மே 30 ஆம் தேதி திட்டமிடப் பட்டிருந்த இப் பாதயாத்திரை 30 நாட்களுக்கு முன்னதாக இன்று 1 ஆம் தேதி வியாழக்கிழமை ஆரம்பிக்க  வேண்டி நேரிட்டது.

கடந்த 25வருடங்களாக சைவமரபு பாரம்பரியத்துடன் இடம்பெற்றுவரும் இப் பாதயாத்திரை கதிர்காமக்கந்தனாலய கொடியேற்றத்தினத்தில் கதிர்காமத்தைச் சென்றடைவது வழமையாகும்.

சந்நதியில்  இன்று காலை நடைபெற்ற விசேடபூஜையினைத் தொடர்ந்து வேலாயுதமானது கதிர்காம பாதயாத்திரைக்குழுத்தலைவர்  ஜெயாவேல்சாமியிடம் சம்பிரதாயபூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.

இன்று வியாழக்கிழமை நீர்வேலியில் தங்கிய அவர்கள்,  நாளை வெள்ளிக்கிழமை மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தில் தங்குவார்கள்.

தொடர்ந்து பாதயாத்திரை வற்றாப்பளை கண்ணகை அம்மனாலயத்தை அடைந்து பின்னர் அங்கிருந்து ஜெயாவேல்சாமிஅணியில் வழமையாக பயணிக்கும் இருநூறு பக்தர்களுடன் மீண்டும் பாதயாத்திரை இடம்பெறும்.

பாதயாத்திரைக்கான சகல அனுமதிகளும் வழமைபோல பெறப்பட்டிருப்பதாக பாதயாத்திரைக்குழுத்தலைவர் ஜெயாவேல்சாமி  தெரிவித்தார்..


பாதயாத்திரை வரலாறு.

1972ஆம்ஆண்டில் அமெரிக்க முருகபக்தர் பற்றிக்ஹரிகன் கதிர்காம பாதயாத்திரையை ஒழுங்கமைக்கப்பட்ட குழுவடிவில் ஆரம்பித்தார். அதன்தொடர்ச்சியாக 1978இல் அவர் ஓய்வுபெற்றதும் அவர்தாங்கிவந்த வேலை காரைதீவைச்சேர்ந்த வேல்சாமி மகேஸ்வரனிடம் ஒப்படைத்தார்.

அன்றிலிருந்து 21வருடங்களாக வேல்சாமி தலைமையில் பாதயாத்திரை நடைபெற்றுவந்தது.கடந்த ஐந்து வருடங்களாக ஜெயாவேல்சாமி இப்பணியில் ஈடுபட்டு வருகிறார்.
 ஆரம்பத்தில் வெருகலிலிருந்து இது இடம்பெற்றது. எனினும் நாட்டின் அமைதிநிலவியபிற்பாடு 2012முதல் சந்நிதியிலிருந்து இப்பாதயாத்திரை ஆரம்பமானது குறிப்பிடத்தக்கது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours