(க.விஜயரெத்தினம்)

இலங்கையின் புகழ்பூத்த அம்மன் ஆலயமாகவும், இலங்கையில் அதிகளவான பக்தர்கள் தீமிதிப்பில் கலந்துகொள்ளும் ஆலயம் என்ற பெருமையினையும்,கிராமியத்தெய்வ வழிபாட்டு அம்சங்கள் நிறைந்த பண்பாட்டுத்தலம் கொண்ட மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தின் நவதள ராஜகோபுரம் மற்றும் ஆலய மஹா கும்பாபிஷேக நிகழ்வு ஆயிரக்கணக்கான அடியார்களின் அரோகரா கோஷத்துடன் இன்று ஞாயிற்றுக்கிழமை(8) காலை நடைபெற்றது.

புன்னைச்சோலை  ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு கிரியைகள் கடந்த 04ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பமானது.
கும்பாபிஷேக பிரதமகுரு சிவஸ்ரீ கு.விநாயகமூர்த்தி குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்களினால் கும்பாபிஷேக கிரியைகள் நடாத்தப்பட்டது.

இவ்வாலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் அடியார்கள் எண்ணெணைக்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்றதுடன் இரு தினங்களும் இலங்கையின் பல பாகங்களிலுமிருந்து ஆயிரக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டிருந்தன.

இன்று அதிகாலை விநாயகர் வழிபாடுகளுடன் கிரியைகள் ஆரம்பமாகி நவகுண்ட யாகம் மற்றும் பிரதான கும்பத்திற்கான விசேட பூஜைகள் நடைபெற்று கும்பம் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு 09 தளங்களையும் 121 அடி உயிரத்தினையும் கொண்ட நவதள இராஜகோபுரத்திற்கு உலங்குவானூர்த்தியில் பூமழைபொலிய பக்தர்களின் அரோகரா கோசத்துடன் கும்பாபிஷேகம் நடாத்தப்பட்டது.


அதனை தொடர்ந்து பிரதான கும்பம் பக்தர்களினால் புடைசூழ கொண்டுசெல்லப்பட்டு அம்பாளின் மூலஸ்தாபன கோபுரம் கும்பாபிஷேகம் செய்யப்பட்டதுடன் பிரதான கும்பம்கொண்டு அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.இன்றைய கும்பாபிஷேக நிகழ்வில் இலங்கையின் பல பாகங்களிலுமிருந்து ஆயிரக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.பரதநாட்டிய மாணவர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றது.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours