எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் டெப்லட் தொழிநுட்ப உத்தியோகத்தர்களுக்குமான பயிற்சி வகுப்பானது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும் பிரதி தொகை மதிப்பாளருமான திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில் மாவட்ட புள்ளிவிபரவியலாளர் ரீ.ஜெய்தனன் ஒழுங்கமைப்பில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் (11) இன்று இடம் பெற்றது.
தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களமானது நாடளாவிய ரீதியில் குடிசன மற்றும் வீட்டு வசதிகள் தொகை மதிப்பு, விவசாய தொகை மதிப்பு, கைத்தொழில் தொகை மதிப்பு போன்றவற்றை மேற்கொண்டு வருகின்றது.
இதனை முன்னிட்டு மாவட்டத்தில் விவசாய தொகை மதிப்பில் விவசாய நீர் பயன்பாடு பற்றிய தற்போதைய நிலையை பதிவு செய்தல், விவசாயிகளின் சமூக மற்றும் பொருளாதார நிலையை மதிப்பிடுதல், பயிர்வகைகள், பசளை வசதி, மற்றும் விதைகள் பயன்பாடு, கால்நடை வளர்ப்பு மற்றும் மீன் வள நடவடிக்கைகள் பற்றிய தரவுகளை சேகரித்தல், விவசாய திட்டம் மற்றும் கொள்கையை அமைப்பதற்கு தேவையான தரவுகளை பதிவு செய்யவுள்ளனர்.
இதன் போது கருத்து தெரிவித்த மேலதிக அரசாங்க அதிபர் நாட்டின் அபிவிருத்திக்கு தகவல்கள் மிக முக்கியமாக காணப்படுகின்றது. இவ்வாறான தகவல்களை நேர்த்தியான முறையில் சேகரித்து இற்றைப்படுத்த வேண்டும் என்பதுடன் மட்டக்களப்பு மாவட்டமானது தகவல் சேகரிப்பில் முன்னனி மாவட்டமாக காணப்படுவதாக இதன் போது சுட்டிக்காட்டினார்.
இந் நிகழ்வில் தலைமை புள்ளிவிபர உத்தியோகத்தர் எம்.எஸ். எம் ரூமி, புள்ளி விபர உத்தியோகத்தர் பா.மணிவண்ணன், தகவல் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


.jpeg)
Post A Comment:
0 comments so far,add yours