எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

சர்வதேச சுனாமி தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் மாவட்டத்தின் பிரதான சுனாமி ஒத்திகை நிகழ்வு மற்றும் பயிற்சி என்பன இன்று (05) காலை 9.30 மணிக்கு மட்டக்களப்பில் இரு வேறு பகுதிகளில் நடைபெற்றது.

சுனாமி அனர்த்த பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு மட்டக்களப்பு கன்னன்குடா மகா வித்யாலய பாடசாலையிலும், காத்தான்குடியில் ஒரு கிராம சேவகர் பிரிவிலும் இந்த ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது.

மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம், மட்டக்களப்பு மாவட்ட செயலகம், பிரதேச செயலகம், இராணுவத்தினர் மற்றும் கல்வி திணைக்களத்தினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திருமதி.சத்யானந்தி நமசிவாயம், ராணுவத்தினர் பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கன்னன்குடா பாடசாலையில் மாணவர்களுக்கு தெளிவு ஊட்டும் வகையில் பயிற்சிகள் வழங்கப்பட்டதுடன், சுனாமி ஏற்பட்ட காலத்தில் இப்பகுதியில் கடல் நீர் வந்ததுடன் அனேகமான சடலங்கள் கரையொதுங்கியதை முன்னிட்டு இவர்களுக்கு சுனாமி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பயிற்சிகளும் விழிப்புணர்வும் வழங்கப்பட்டது.

சுனாமி அனர்த்த பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந்து சமுத்திர பிராந்திய நாடுகளின் முன்னாயத்த நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக வருடாந்தம் ஒழுங்கு செய்யப்படுகின்ற பிராந்திய நாடுகளுக்கான சுனாமி ஒத்திகை பயிற்சியாகவே இச்செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours