அன்மையில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ள அனர்த்தம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் முயற்சியினால் முதற்கட்டமாக நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இன்று (03) நிவாரண உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின்கீழ் அரச உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் நோக்கில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்தின் ஒருங்கிணைப்புடன் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதனடிப்படையில் உத்தியோகத்தர்கள், கோவில்கள், விளையாட்டுக் கழகங்கள், பொது அமைப்புகள் மற்றும் நலன்விரும்பிகளின் பங்களிப்புடன் சேகரிக்கப்பட்ட இந்நிவாரணப் பொருட்கள் கோரளைப்பற்று வடக்கு – வாகரை, கோரளைப்பற்று மேற்கு – ஓட்டமாவடி, கோறளைப்பற்று தெற்கு – கிரான் மற்றும் ஏறாவூர் பற்று – செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதற்காக உரிய பிரதேச செயலாளர்களிடம் கையளிக்கப்பட்டன.
இந்நிவாரணப் பொருட்களை உரிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு எடுத்துச் சொல்லும் நோக்கில் மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் இணைந்து பார ஊர்திகளில் ஏற்றுவதிலும் உரிய இடங்களில் இறக்கிக் கொடுப்பதிலும் முனைப்புடன் ஈடுபட்டனர்.


.jpeg)
Post A Comment:
0 comments so far,add yours