நூருல் ஹுதா உமர்



2026 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரக் கல்வியைத் தொடங்குவதற்கு தகுதி பெற்ற (முதலாம் ஆண்டு) மாணவர்களுக்காக, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், இலங்கை வக்ஃப் சபையுடன் இணைந்து, முஸ்லிம் தரும நிதியத்திலிருந்து (MCF) புலமைப்பரிசில் வழங்கத் தீர்மானித்துள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் எம். எஸ். எம். நவாஸ் தெரிவித்துள்ளார்.

அவரது அறிவிப்பில் மேலும், இந்த புலமைப்பரிசில் திட்டம், வேறு எந்த நிறுவனத்திலிருந்தும் புலமைப்பரிசில் அல்லது நிதியுதவி பெறாத, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களை நோக்கமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானம், கணிதம், வணிகம், கலை மற்றும் தொழில்நுட்பப் பிரிவுகளில் க.பொ.த உயர்தர பாடத்திட்டத்தைப் பயிலும் மாணவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்களாவர்.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், முறையாக நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் தேவையான அனைத்து துணை ஆவணங்களையும் இணைத்து, 2026 ஜனவரி 31 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் பதிவுத் தபாலின் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். தாமதமாக கிடைக்கும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்காணலின் அடிப்படையில் தகுதியுடையவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பத்துடன் உண்மைப்படுத்தப்பட்ட தேசிய அடையாள அட்டையின் பிரதியொன்று, உண்மைப்படுத்தப்பட்ட க.பொ.த (சா.த) தேர்வு முடிவுகளின் பிரதியொன்று, உண்மைப்படுத்தப்பட்ட பிறப்புச் சான்றிதழின் பிரதியொன்று, குறைந்த வருமானம் உள்ளவர் என்பதை உறுதிப்படுத்தும் கிராம சேவகர் சான்றிதழ், குறைந்த வருமானம் உள்ளவர் என்பதை உறுதிப்படுத்தும் பள்ளிவாசல் கடிதம், பாடசாலை அதிபரின் உறுதிப்படுத்தல் கடிதம் போன்றன இணைத்து அனுப்ப வேண்டும் என்று அறிவித்துள்ளார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours