நூருல் ஹுதா உமர்

“கல்விக்கு கரம் கொடுப்போம்” என்ற தொனிப்பொருளின் கீழ், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அமீர் அப்னான் அவர்களின் முன்னெடுப்பில், ரூபாய் 06 லட்சம் செலவில், முதல் கட்டமாக 500 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அப்னான் எடுக்கேஷன் போரம் நிர்வாகிகளிடம் குறித்த கற்றல் உபகரணங்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.


சம்மாந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வித் தேவைகளை கருத்தில் கொண்டு இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பாடப்புத்தகங்கள், பயிற்சி புத்தகங்கள், எழுதுகோல்கள் உள்ளிட்ட அத்தியாவசிய கற்றல் உபகரணங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதேச சபை உறுப்பினர் அமீர் அப்னான்,

“ஒரு சமூகத்தின் எதிர்காலத்தை உறுதிப்படுத்துவது கல்வியே. பொருளாதார தடைகள் எந்த மாணவனின் கனவுகளையும் தடுக்கக் கூடாது என்பதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கம். கல்விக்காக வழங்கப்படும் உதவி, நாட்டின் எதிர்காலத்திற்கான முதலீடு” எனக் குறிப்பிட்டார்.

மேலும், இந்த வேலைத்திட்டம் தொடர்ச்சியாக அடுத்த கட்டங்களிலும் விரிவுபடுத்தப்படும் என்றும், கல்வி, சமூக நலன் மற்றும் மாணவர் மேம்பாட்டை மையமாகக் கொண்டு பல்வேறு திட்டங்கள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கல்வியை முன்னிறுத்திய இந்த முயற்சிக்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்தனர். இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் முஹம்மட் ஆஷிக் உட்பட அப்னான் எடுக்கேஷன் போரம் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours