((கனகராசா சரவணன்)
அம்பாறை நகரத்திற்கு உகணையில் இருந்து போதைப்பொருளை நீண்டகாலமாக கடத்தி வந்து வியாபாரத்தில் ஈடுபட்ட சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் உட்பட இருவரை ஜஸ் மற்றும் ஹெரோயின் போதை பொருளுடன் நேற்று செவ்வாய்க்கிழமை (06) நகரத்தில் வைத்து கைது செய்துள்ளதாக அம்பாறை தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த பொலிஸ் நிலையத்தின் ஊழல் தடுப்பு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தர வின் ஆலோசனையில் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வேத முல்லவின் தலைமையில் பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டாரவின் ஒருங்கிணைப்பில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மேற்பார்வையில் அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அசேல கே. ஹேரத் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவ தினம் இரவு 10.00 மணிக்கு அம்பாறை நகர் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்
இந்த நிலையில் உகண திஸ்ஸபுர கிராமத்தில் இருந்து அம்பாறை நகருக்கு போதை பொருளை எடுத்துக் கொண்டு சென்ற ஒரு வியாபாரியை டி.எஸ். சேனநாயக்க சந்திப்பில் வைத்து 2101 மில்லிகிராம் ஹெரோயின் போதை பொருளுடன் கைது செய்து அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டனர்
இதன் போது அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் அம்பாறை பாலிகா சந்தியில் வைத்து சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரான வியாபாரியை 8757 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்தனர்
இதில் கைது செய்யப்பட்ட இருவரும் நீண்ட காலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது டன் கைது செய்யப்பட்ட இருவரையும் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Post A Comment:
0 comments so far,add yours