சுமன்

மட்டக்களப்பு மாவட்டத்திற்குட்பட்ட கோரளைபற்று வடக்கு (வாகரை) பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சில கிராம சேவகர் பிரிவுகளை கோரளைப்பற்று மத்தி (வாழைச்சேனை) பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களாக எல்லை நிர்ணயம் செய்வது மற்றும் கோரளைப்பற்று தெற்கு (கிரான்) பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சில கிராம சேவகர் பிரிவுகளை கோரளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி) பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களாக நிர்ணயம் செய்வது தொடர்பிலான பிரச்சனை மாவட்ட ரீதியில் பேசுபொருளாக அமைந்துள்ள நிலையில் இது தொடர்பில் கலந்துரையாடும் முகமான கலந்துரையாடல் இன்று வாகரையில் இடம்பெற்றது.

வாகரை பிரதேச சிவில் செயற்பாட்டாளர்கள் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட இக்கலந்துரையாடலில் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சிவில் அமைப்புகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கோரளைப்பற்று வடக்கு (வாகரை) பிரதேச சபை உறுப்பினர்கள் எனப் பலதரப்பட்டவர்களுடன் இக்கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் கோரளைப்பற்று வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் க.தெய்வேந்திரன், உபதவிசாளர் ச.ரசிகரன் உள்ளிட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் வாகரை பிரதேச இளைஞர் கழகம் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், சிவில் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புணானை கிழக்கு, ரிதிதென்ன மற்றும் காரமுனை கிராம சேவையாளர் பிரிவுகளை கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவுக்குள் உள்வாங்கும் விதமான நடவடிக்கை தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டதுடன், குறித்த பிரிவுகள் தொடர்பில் பிரதேச ரீதியாக எதிர்கொள்ளும் விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் இவ்விடயம் எதிர்வரும் நாட்களில் மற்றைய பிரதேசத்திற்குட்ட பொது அமைப்புகளுடனும் கலந்துரையாடுவது தொடர்பாகவும் தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours