எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் தித்வா புயலினால் சிக்கி இறந்த கால்நடைகளுக்கான  இழப்பீடு  வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட பிரதிப்பணிப்பாளர் எம்.ஏ. ஹாதி அவர்களின் தலைமையில் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள மாநாட்டு மண்டபத்தில்  இன்று (13) இடம் பெற்றன. இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ், கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் வைத்தியர் எம்.ஏ.எம். சுல்பிஹார் அபூபக்கர் கலந்து கொண்டனர்.

தித்வா புயலினால் மாவட்டத்தில் 907  பண்ணையாளர்கள் பாதிக்கப்பட்டனர் இதனை முன்னிட்டு அரசாங்கத்தினால் அவர்களுக்கு  295 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு முதற்கட்டமாக ஆரையம்பதி, மட்டக்களப்பு, காத்தான்குடி, ஏறாவூர்  பிரதேசங்களைச் சேர்ந்த நபர்களுக்கான காசோலைகள் இன்று வழங்கி வைக்கப்பட்டன.

 கிழக்கு மாகாணத்தில் டித்வா புயலினால் பாதிக்கப்பட்டோருக்கு அரசாங்கத்தினால் 1000 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்குவதற்கான செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. நாடளாவிய ரீதியில் ஒப்பிடுகையில் கிழக்கு மாகாணத்திற்கு  பாரியளவு நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தித்வா புயலினால் வாகரை, கிரான், செங்கலடி போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த பண்ணையாளர்களின் கால்நடைகள் அதிகம் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநரின் இணைப்பாளர் ஜனாப் அப்துல்லா, விவசாய அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் திலகநாதன், சுற்றாடல் அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் பிரிதெளஸ் நலீமீ,  உயர் அதிகாரிகள்,கால்நடை வைத்திய அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.







Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours