( வி.ரி. சகாதேவராஜா)


மட்டக்களப்பை அதிரச் செய்த கொக்கட்டிச்சோலை நெல்லிக்காட்டு பாழ்ங்கிணறு படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றும் ஒரு சந்தேகநபர் நேற்று கொழும்பு வத்தளையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாழ்ங்கிணறு  படுகொலை சந்தேகநபர்களின் காஞ்சிரன்குடா   வீட்டிலிருந்து மயக்க மருந்து, குளிசைகள் மீட்கப்பட்டமை தெரிந்ததே.

அவர்களிடம் தொடர்ந்து விசாரணை செய்கையில் குறித்த மயக்க மருந்து போத்தல்கள் கொழும்பு வத்தளையில் உள்ள ஒரு பார்மசியில் வாங்கியதாக கூறியுள்ளனர்.

அதனையடுத்து  மட்டக்களப்பிலிருந்து கொழும்பு சென்ற கிழக்கு மாகாண பெருங்குற்றவியல் தடுப்பு பிரிவு பொலீஸ் பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன்  தலைமையிலான விசேட போலீஸ் குழுவினர் இந்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வத்தளை பார்மசி உரிமையாளரை கைது செய்தனர்.

அங்கிருந்து அவரை இரவோடிரவாக மட்டக்களப்பிற்கு கொண்டு வரப்பட்டு, இன்று (30) திங்கட்கிழமை கொக்கட்டிச்சோலை பொலீஸ் நிலையத்தில் இருந்து மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.

ஏலவே இவ் விவகாரத்தில் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இறுதியாக கொக்கட்டிச்சோலையிலுள்ள  ஆட்டோ சாரதியும் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

தற்போது ஏழாவது சந்தேக நபராக வத்தளை பார்மசி உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொக்கட்டிச்சோலை பொலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.

இதேவேளை கிணற்றிலிருந்து உயிரோடு மீட்ட தாயும் பிள்ளையும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உடல்நல பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இதேவேளை,  சந்தேகநபர்களுக்கான அடையாள அணிவகுப்பு விரைவில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours