போரதீவுப்பற்றில் காட்டு யானை அட்டகாசம் - நான்கு பிள்ளைகளின் தாய் பரிதாபமாக உயிரிழப்பு.!
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுரவணையடியூற்று கிராமத்தில், இன்று (02.05.2026) ஆம் திகதி அதிகாலை இடம்பெற்ற காட்டு யானைத் தாக்குதலில் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது.
திக்கோடை,சுரவணையடியூற்று கிராமத்தைச் சேர்ந்த 54 வயதுடைய தயானந்தராஜா வசந்தி என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
நான்கு பிள்ளைகளின் தாயான இவர், இன்று அதிகாலை தனது வீட்டு வளவிற்குள் நின்றபோது, அங்கு நுழைந்த காட்டு யானை திடீரெனத் தாக்கியுள்ளது.
இத்தாக்குதலில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து வெல்லாவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
போரதீவுப்பற்று எல்லைக் கிராமங்களில் அண்மைக்காலமாக காட்டு யானைகளின் ஊடுருவல் அதிகரித்து வரும் நிலையில், இன்றைய இந்தச் சோகமான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
(ரஞ்சன்)



Post A Comment:
0 comments so far,add yours