மட்டக்களப்பு கோவில்போரதீவு ஸ்ரீ கண்ணகி அம்பாள் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் ஆரம்பம்!
"அகிலம் எல்லாம் போற்றும் அகிலாண்ட நாயகியே அன்புவடிவான உமையே!
அன்னையே சிவகாமி அம்மையே எனை ஈன்ற ஆதியே சிவசக்தி தாயே!"
ஈழத்துச் சைவ மக்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க வழிபாட்டுத் தலங்களில் ஒன்றான, மட்டக்களப்பு – கோவில்போரதீவு அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த அலங்கார மஹோற்சவம், எதிர்வரும் (23.05.2026)ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
கிழக்கு மாகாணத்தின் "மீன்பாடும் தேன் நகர்" எனப் போற்றப்படும் மட்டக்களப்பின், தேன்பால் நகரில் எழிலோடு அமைந்துள்ள இவ்வாலயத்தின் திருவிழாவானது, தொடர்ந்து 9 தினங்கள் சிறப்பு வழிபாடுகளுடன் நடைபெற்று, (31.05.2026)ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருக்குளிர்த்தியுடன் நிறைவடையவுள்ளது.
(31.05.2026) அதிகாலை வேளையில் பக்திப் பரவசமூட்டும் திருக்குளிர்த்தி, விசேட வழிபாடுகள் மற்றும் சடங்குகள் எய்துதலுடன் அலங்கார உற்சவம் இனிதே நிறைவுபெறும்.
பிரதான திருவிழாக்கள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, (07.06.2026)ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முன்னிரவு வேளையில் விசேட வைரவர் விழா சிறப்பாக நடைபெறவுள்ளது.
மேலும், உற்சவ காலங்கள் முழுவதும் பகல் மற்றும் இரவு வேளைகளில் வருகைதரும் பக்த அடியார்களுக்குத் தொடர்ச்சியாக அன்னதானம் வழங்கப்படவுள்ளதுடன், பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
"சிலம்பூச் செல்வி" கண்ணகி அம்பாளின் பேரருளையும், கோடிப் புண்ணியங்களையும் பெற்றுய்யுமாறு நாடளாவிய ரீதியிலுள்ள அடியார் பெருமக்கள் அனைவரையும் ஆலயப் பரிபாலன சபையினர் பக்திப் பெருக்குடன் அழைக்கின்றனர்.
(ரஞ்சன்)

Post A Comment:
0 comments so far,add yours