மாளிகைக்காடு விசேட நிருபர்
கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான மாணவர் தலைவர்களுக்கான பதக்க அணிவிப்பு விழாவும், தலைமைத்துவ பயிற்சிகளை முடித்துக்கொண்ட மாணவ தலைவர்களுக்கான சான்றிதழ் வழங்கலும் பாடசாலையின் ஸ்மார்ட் அறையில் நடைபெற்றது.
பாடசாலை உதவி அதிபர் எம்.எச்.ஐ. இஸ்ஸத்தின் நெறிப்படுத்தலில் அதிபர் எஸ்.எம்.எஸ். ரிஸானா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி ஏ.எம். ரோசான் அக்தர் கலந்து கொண்டார். கௌரவ அதிதிகளாக தேசிய மாணவர் படையணியின் 38ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் கே.எம். தமீம், அல் மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் தவிசாளர் யூ.எல். நூருல் ஹுதா உமர், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கல்முனை கிளையின் தலைவர் அஷ்ஷேய்க் ஏ.எல்.எம்.முர்ஷித் முப்தி (ஸஃதி, நஜ்மி) ஆகியோர் கலந்துகொண்டு தலைமைத்துவ திறன்கள் தொடர்பில் சிறப்புரையாற்றினார்.
நிகழ்வின் போது 2026 ஆம் ஆண்டிற்காக தெரிவு செய்யப்பட்ட மாணவர் தலைவர்கள் மற்றும் மாணவர் தலைவிகள் உத்தியோகபூர்வமாக பதக்கங்களைப் பெற்றுக்கொண்டு தங்களது பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டனர். பாடசாலையின் ஒழுக்கம், தலைமைத்துவம், சேவை மனப்பான்மை மற்றும் மாணவர் நலன்களை முன்னிறுத்தும் வகையில் அவர்கள் செயற்பட வேண்டுமென அதிதிகள் வலியுறுத்தினர்.
உரையாற்றிய அதிதிகள், மாணவர் தலைவர்கள் கல்வியில் மட்டுமன்றி ஒழுக்கம், பொறுப்புணர்வு மற்றும் சமூகப் பணிகளிலும் முன்னுதாரணமாக திகழ வேண்டும் எனக் குறிப்பிட்டார்கள். மேலும், எதிர்கால சமூகத்தின் தலைவர்களாக உருவாகும் மாணவர்கள் தலைமைத்துவப் பண்புகள், தொடர்பாடல் திறன்கள் மற்றும் குழு செயற்பாடுகளை பாடசாலை மட்டத்திலிருந்தே வளர்த்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.
நிகழ்வில் எஸ்.எம்.எம். நகையக உரிமையாளர் எஸ்.எம்.எம். அப்சர், தொழிலதிபர் ஏ.எம். சிப்னாஸ் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டதுடன், மாணவர் தலைவர்களின் உறுதிமொழி ஏற்பும் இடம்பெற்றது.
பாடசாலையின் ஒழுக்காற்று சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, மாணவர்களின் தலைமைத்துவ ஆற்றலை வளர்க்கும் முக்கிய நிகழ்வாக அமைந்ததுடன், புதிய மாணவர் தலைவர்களுக்கு தங்களது பொறுப்புகளை உணர்த்தும் சிறப்பான நிகழ்வாகவும் அமைந்தது.








Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours