ரஞ்சன்

மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட வெல்லாவெளி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முன் வீதியை கொங்கிறிட் வீதியாக புனரமைக்கும் பணிகள் (10.06.2026) இன்று காலை அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

மாகாண நன்கொடை வேலைத்திட்டத்தின் (PSDG) கீழ் இதற்கென 1 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இப்பணியை போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் வி.மதிமேனன் தலைமை தாங்கி ஆரம்பித்து வைத்தார்.

தொடரும் அரசியல் சர்ச்சை மற்றும் குற்றச்சாட்டுகள்.

இந்த அபிவிருத்திப் பணிகள் தொடர்பாகப் பேசிய தவிசாளர், போரதீவுப்பற்று பிரதேச சபையானது வறுமை, வறட்சி மற்றும் காட்டு யானைகளின் தாக்கங்களால் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்து வரும் மக்களைக் கொண்ட ஒரு பகுதியாகும் எனக் குறிப்பிட்டார். 

மக்களின் நலன் கருதி சபை நிதியைக் கொண்டு 10 வட்டாரங்களிலும் இலங்கைத் தமிழரசு கட்சியின் 8 கௌரவ உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவோடு பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

​"இப்படியான சூழலில், 'கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு' என்ற பெயரில் படகு சின்னத்தில் போட்டியிட்டு வென்ற 5 உறுப்பினர்கள், மக்களின் அத்தியாவசிய அபிவிருத்திகளுக்குத் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு, எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், சபையினால் வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவான 15,000 ரூபாயைப் பெறுவதற்கு மட்டும் அவர்கள் தவறாமல் வந்து செல்வது வேடிக்கையானது" என்று தவிசாளர் வி.மதிமேனன் சாடியுள்ளார்.

இருப்பினும், இத்தகைய எதிர்ப்புகளையும் கடந்து, பொதுமக்களின் ஒத்துழைப்போடு பலாச்சோலையில் மேற்கொள்ளப்படவுள்ள 30 இலட்சம் ரூபாய் மதிப்பிலான வீதி அபிவிருத்தி உட்பட அனைத்து வட்டாரங்களுக்குமான சேவைகளும் தடையின்றித் தொடரும் என அவர் உறுதியளித்தார்.

இன்றைய ஆரம்ப நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேச சபையின் உபதவிசாளர் த.கயசீலன், பிரதேச சபையின் செயலாளர் எஸ்.பகீரதன், வெல்லாவெளி வட்டார உறுப்பினர் வரதராஜன், தமிழரசுக்கட்சியின் வெல்லாவெளி வட்டார அமைப்பாளர் பிரதீப்குமார், தொழில்நுட்ப உத்தியோகத்தர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர், ஆலய நிர்வாகத்தினர் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.








Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours