எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

- வருடத்திற்கு ஒரு இலட்சம் நியூசிலாந்து சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அனுப்பும் திட்டம் – மட்டக்களப்பின் சுற்றுலா, மீன்பிடி மற்றும் அபிவிருத்தி குறித்து விரிவான கலந்துரையாடல்

இலங்கைக்கான நியூசிலாந்து நாட்டின் உயர் ஸ்தானிகர் டேவிட் பைன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான ஜே. எஸ். அருள்ராஜ் அவர்களை இன்று (14) மட்டக்களப்பு புதிய மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் சந்தித்து, மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தி வாய்ப்புகள் குறித்து விரிவாக கலந்துரையாடினார்.

சந்திப்பின் போது மாவட்டத்தின் அபிவிருத்தி, அனர்த்த முகாமைத்துவம், சுற்றுலா, மீன்பிடி மற்றும் பொருளாதார முன்னேற்றம் தொடர்பான பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன.

உயர் ஸ்தானிகரின் கேள்விகளுக்கு அமைவாக, மாவட்டத்தில் டித்வாவிற்குப் பின்னரான நிலைமைகள் குறித்து மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் ஏ. எஸ். எம். ஸியாத் விளக்கமளித்தார்.

அதேவேளை, மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் அவற்றுக்காக ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பான விபரங்களை மாவட்ட திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர் எஸ். சசிகுமார் எடுத்துரைத்தார். மாவட்டத்தில் இதுவரை நிர்மாணிக்கப்பட்ட பாலங்கள், வீடுகள், வீதி அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் குறித்தும் அவர்  தெளிவு படுத்தினார்.

மேலும், நடைமுறைப்படுத்தப்பட்ட மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றனவா என உயர் ஸ்தானிகர் ஆர்வத்துடன் வினவினார்.

இதன்போது கருத்து வெளியிட்ட உயர் ஸ்தானிகர் டேவிட் பைன், விரைவில் வருடத்திற்கு சுமார் ஒரு இலட்சம் நியூசிலாந்து சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அனுப்பும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்தார். இந்த முயற்சி மட்டக்களப்பு உள்ளிட்ட பிராந்தியங்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

மேலும், பாசிக்குடாவை மாதிரியாகக் கொண்டு கிழக்கு கரையோரத்தின் ஏனைய பகுதிகளையும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடங்களாக அபிவிருத்தி செய்து, மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் சுற்றுலாத்துறையை விரிவுபடுத்துவதற்கு தாம் ஆதரவு வழங்கத் தயாராக இருப்பதாகவும் உயர் ஸ்தானிகர் தெரிவித்தார்.

அத்துடன், மாவட்டத்தின் மீன்பிடித் தொழிலின் தற்போதைய நிலை, இறால் உற்பத்தி மற்றும் கடல்சார் பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பிலும் உயர் ஸ்தானிகர் ஆர்வத்துடன் கேட்டறிந்தார். அதற்கான விளக்கங்களை மாவட்ட அதிகாரிகள் வழங்கினர்.

இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்க்ஷினி ஸ்ரீகாந்த், உதவி மாவட்ட செயலாளர் ஜி. பிரணவன், மாவட்ட பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ். நிர்மலராஜன், தகவல் அதிகாரி வி. ஜீவானந்தன், மாவட்ட விவசாயப் பணிப்பாளர் ஆர். சிவனேசன் உள்ளிட்ட மாவட்ட செயலகத்தின் உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours