(சா.நடனசபேசன்)
அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க போராட்டத்தின் விளைவாக - அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு தொடர்பாக ஆராய உருவாக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவுக்கும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று மாலை சந்திப்பு நடைபெற்றது.
இச்சந்திப்பில் - அமைச்சர்களான ரவூப்ஹக்கீம், ரஞ்சித் மத்தும பண்டார, ஹர்ஷ டீ சில்வா, ஏரான் விக்கிரமரத்ன, அசோக அபேசிங்க ஆகியோருடன் நிதியமைச்சின் செயலாளர், கல்வியமைச்சின் செயலாளர் உட்பட உயர்மட்ட குழுவினரும் கலந்துகொண்டிருந்தனர்.
இச்சந்திப்பில் - ஆசிரியர் அதிபர் சம்பளத்தை அதிகரிப்பதாக இருந்தால் - பொது அரச சேவையிலிருந்து வெளியே எடுத்து - அதிபர், ஆசிரியர் சேவையை ஒன்றிணைந்த சேவையாக்கவேண்டும் என இணக்கம் காணப்பட்டது.
அத்துடன்-
அதிபர், ஆசிரியர்களுக்கான சம்பள முரண்பாடு உள்ளதை ஏற்றுக்கொண்ட அமைச்சரவை உபகுழு, அதனை நிவர்த்தி செய்வதற்கு ஆணைக்குழு ஒன்றை நியமிப்பதற்கும் தீர்மானித்துள்ளது.
நாளை செவ்வாய்க்கிழமை இணைந்த சேவை <Closed Service > யாக்குதல் மற்றும் சம்பள முரண்பாட்டை தீர்ப்பது தொடர்பான ஆணைக்குழு நியமிப்பதற்கான அமைச்சரவை பத்திரம் நிறைவேற்றப்படும் எனவும் உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டிருந்த அனைத்து அமைச்சரவை உபகுழு அமைச்சர்களினதும் கையொப்பத்துடனான உறுதிமொழியும் தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ளது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours