(துதி)
மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் தேசிய மாவீரர் தினம் புதன்கிழமை மாலை 6.05 மணிக்கு மழைக்கு மத்தியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

இளைஞர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மாவீரர் தின நினைவு கூரலின் போது வீரமரணம் எய்திய மாவீரர்களுக்கு மூன்று நிமிடம் மௌன இறைவணக்கம் செலுத்தப்பட்டதுடன், மாவீரர்களின் உறவுகள் கண்ணீர் மல்க மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு கூழாவடியைச் சேர்ந்த லெப்கேணல் கதிரவனின் தாயார் கணபதி தங்கம்மாவினால் மாவீரர் ஈகைச் சுடரேற்றப்பட்டதுடன், பின்னர் கலந்து கொண்ட அனைவராலும் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

கிரான் பிரதேசத்தில் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் அச்சத்திற்கு மத்தியில் இடம்பெற்ற தேசிய மாவீரர் தினத்தில் பல்லாயிரக் கணக்கான மக்கள் காலநிலை மாற்றத்திற்கு மத்தியில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் செயலாளர் எஸ்.கஜேந்திரன், மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் த.சுரேஸ், பிரதேச சபை உறுப்பினர் கு.குணசேகரன் உட்பட பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது தேசிய மாவீரர் தினத்தில் கலந்து கொண்ட அனைவரும் ஏற்பாட்டாளர்களினால் தென்னம் கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது.








Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours