(துதி)

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்களின் போது கட்சித் தீர்மானங்களை மீறி, கட்சியின் ஒழுக்காற்று விதியினைப் புறக்கணித்து கட்சி மாறிச் செயற்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரளைப்பற்று வடக்கு (வாகரை) பிரதேச சபை உறுப்பினர் பாலசிங்கம் முரளிதரன் என்பவர் கட்சி உறுப்புரிமை, மற்றும் பதவிகள், பொறுப்புக்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கோரளைப்பற்று வடக்குப் பிரதேச சபையின் பால்சேனை வட்டாரத்தைப் பிரதிநித்துவப்படுத்தும் பாலசிங்கம் முரளிதரன் என்பவர் கடந்த 09ம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் இணைந்து கொண்டதாக ஊடகங்கள் மூலம் அறிக்கை வெளியிட்டு, கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராகச் செயற்பட்டார். இதனடிப்படையில் இவர் மீது நடவடிக்கை எடுக்கும் முகமாக இவரின் கட்சி உறுப்புரிமை, கட்சிவழி பதவிகள் மற்றும் பொறுப்புக்கள் என்பவற்றில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அத்துடன் இவரின் பிரதேச சபை உறுப்பினர் பதவியினையும் உடன் நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

அத்துடன் இதுபோன்று இன்னும் சில உறுப்பினர்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர்கள் தொடர்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours